Showing posts with label N2R. Show all posts
Showing posts with label N2R. Show all posts

Saturday, 18 November 2023

சூரசம்ஹாரம் வரலாறு

தமிழ் கடவுள் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் சில வரலாற்று நிகழ்வுகளை எமது அப்புச்சி (கொங்கு தமிழில் தாயாரின் தந்தையை அழைக்கும் சொல்) முருகபத்தர். சுப்பையகவுண்டர் எமது சிறு வயதில் கூற கேட்டு இந்த இந்த வலைப்பதிவை பதிவிட்டு அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
முருகனுடைய வரலாறுகள் பலப்பல. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. அசுரர்கள் என்றால் ஏதோ விகார உருவம் படைத்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல. நமது உள்ளத்திலே உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகளைத் தான் உருவகப்படுத்தி அசுரர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அசுரர்களைத் தொலைத்து சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, முருகன் அருள் பாலிக்கத்தானே வேண்டும்.

சூரசம்ஹாரம் புராணங்களில் எல்லாம் ஒரே விதமாகக் கூறப்படவில்லை. ‘ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன, ஆதலால் இக்கதையும் அனந்தமாம்’ என்று சொல்லி கந்த புராண ஆசிரியர் இத்தனை கதைகள் அந்தப் புராணங்களில் இருப்பதற்கு சமாதானம் சொல்லி விடுகிறார். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் கதைதான் கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. கதை இதுதான்.

பிரம்மாவின் புத்திரன் தக்கன் ஒரு வேள்வி செய்கிறான். அந்த வேள்வியிலே தன் மருமகன் ஆம், தாக்ஷாயணியின் கணவன், சிவபிரானுக்கு அழைப்பில்லை. அங்கு அவன் கெளரவிக்கப்படவும் இல்லை. இது தெரியாமல், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், முதலிய தேவர்கள் எல்லாம் அந்த வேள்விக்குச் சென்று விடுகிறார்கள். இது காரணமாக சிவனுடைய அம்சமான வீரபத்திரனால் இவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள். காணும் காணாததற்கு, சூரபதுமன் முதலிய அசுரர்களாலே துன்புறுத்தவும் படுகிறார்கள். தேவர்கள் தங்கள் துயரம் தாங்க முடியாமல் சிவபிரானிடமே சென்று முறையிடுகிறார்கள். சிவபெருமானும் அவர்கள் துன்பத்தை நீக்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு அதோ முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களில் இருந்து ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச் சென்று அக்னியிடம் கொடுத்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறான். அக்னியும் அந்தப் பொறிகளின் வெம்மையைத் தாங்காது கங்கையிலேயே விட்டு விடுகிறான். கங்கை இந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இது நடந்தது வைகாசி மாதத்தில் விசாக நாளில். இப்படித்தான் விசாகன், பிறக்கிறான் இவ்வுலகிலே.

ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கிறார்கள். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையொடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து அணைக்கிறாள். தன் மார்பகத்தில், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறான். கந்தன் எனப் பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்று எல்லோராலும் அருமையாக அழைக்கப்படுகிறான்.

அருவமும் உருவம் ஆகி
அநா தியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து அங்கு
உதித்தனன் உலகம் உய்ய

என்று அறுமுகனது அவதாரத்தைக் கூறுகிறது கந்த புராணம்

இப்படி எல்லாம் பிறந்து கந்தன் வளர்கின்ற போது சூரபதுமனும் தேவர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். உடனே கந்தன் தன் கடமையைச் செய்ய முனைகிறான். தன் தந்தையின் கட்டளைப்படி அவனுடன் புறப்படுகிறார்கள் நவவீரர்களும் மற்றவர்களும் எண்ணிறந்த படைக்கலங்களை ஏந்திக் கொண்டு. அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து ஆசி கூறி அனுப்புகிறாள். (சூரனை வேல் கொண்டு சம்ஹாரம் செய்யும் முருகன், தனது அன்னையிடம் வெற்றி வேலினை வாங்குவார். இந்த நிகழ்ச்சி கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளன்று நடைபெறும். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்த நிகழ்வு நேற்று நடைபெறும் பொழுது முருகனின் முகத்தில் வியர்வை பெருகும்.) இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கானவர்கள் நரகாசுரனும், கிரெளஞ்சமலையும் தான். இவர்களை வெற்றி காணுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லைதான். அதன் பின் தன் சேனா வீரர்களுடன் மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு சிவனை எழுந்தருளச் செய்து வணங்கி, தன் படைக்கலங்களை இன்னும் பெருக்கிக் கொள்கிறான். சேயன் அமைத்த சிற்றூர் சேய்ஞலூர் என்று பெயர் பெறுகிறது. அங்கிருந்து புறப்பட்ட முருகன் நவவீரர்களுடன் நேரே வந்து விடுகிறான் திருச்செந்துருக்கு. ஏன்? அதை அடுத்த வீரமகேந்திரத் தீவில் கட்டிய கோட்டையைத் தானே தன் கேந்திர ஸ்தானமாகக் கொண்டு சூரபதுமன் ஆட்சி புரிகிறான். நவவீரர்களில் சிறந்த வீரபாகுத் தேவரைத் தூதனுப்புகிறான், சிறையிலிருக்கும் தேவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லி, சூரபதுமன் இணங்கவில்லை. போருக்கே புறப்பட்டு விடுகிறான் தன் இளைஞரோடும் வீரரோடும். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும் சிங்கமுகாசுரனையும் கொன்று குவிக்கிறான். ஆறுநாள் நடக்கிறது போர். கடைசியில் போர் முருகனுக்கும் சூரபதுமனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரிலே அன்னை தந்த வேலைப் பிரயோகித்து, சூரசம்ஹாரத்தையே முடிக்கிறான். வேற்படையால் இருகூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறை தன் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். இப்படி, மணம் புரிந்த தெய்வயானையையும் வள்ளியையும் தனக்கு மிகவும் உகந்த இடமான திருச்சீரலைவாய்க்கே கூட்டி வந்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறான் பக்தர்கள் எல்லாம் கண்டு களிக்க.

கொங்கை குறமங்கையின்
சந்த மணம் உண்டிடும்
கும்ப முனி கும்பிடும்
தம்பிரானே

இந்தச் செந்திலாண்டவன் கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றி அருமையான வரலாறு ஒன்று உண்டு. அதையும் தெரிந்து கொள்ளலாம் தானே.

1648ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் ஆறுமுகப் பெருமானின் திரு உருவை அவனிருக்கும் வண்ணத்திலேயே கண்டுகளித்திருக்கிறார்கள். அவர்களுடைய களிப்புக்குக் காரணம், அவன் சூரபதுமனை சம்ஹரித்த மூர்த்தி என்பதினால் அல்ல. அந்த மூர்த்தி உருவாகியிருக்கும் உலோகம் பொன்னாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அந்த மூர்த்தியை எடுத்துச் சென்று உருக்கினால் அளவற்ற செல்வம் கிடைக்குமே என்று எண்ணியிருக்கிறார்கள். கோயில் நிர்வாகிகள் ஏமாந்திருந்த போதோ, அல்லது நல்ல நடுநிசியிலோ மூர்த்தியைக் களவாடி தங்கள் கப்பலில் ஏற்றி இரவோடு இரவாக கடல் கடத்திச் செல்ல முனைந்திருக்கிறார்கள்.

ஆனால் அறுமுகனோ அவர்களுடன் நெடுந்துரம் செல்ல விரும்பவில்லை. அது காரணமாக கடலிலே புயல் அடித்திருக்கிறது. கொந்தளிக்கும் கடலிலே கப்பல் ஆடி இருக்கிறது. உத்பாதம் நேர்வதை அறிந்த அந்த டச்சு வியாபாரிகள் இனியும் அறுமுகனை தங்களுடன் வைத்திருப்பது தகாது என்று அவனை அலக்காய்த்தூக்கி குமுறும் கடலிலேயே எறிந்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் தலை தப்பி தங்கள் ஊர் சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

கோயிலில் இருந்த அறுமுகவன் காணாமற் போன செய்தியை, நாயக்க மன்னரின் பிரதிநிதியாக விளங்கிய வடமலையப்ப பிள்ளையன் அறிந்திருக்கிறார். மிகுந்த வருத்தமுற்றிருக்கிறார். என்ன செய்வது என்று அறியாதவராய், பஞ்சலோகத்தில் இன்னொரு அறுமுகனை வார்த்தெடுத்து நிறுத்த முனைந்திருக்கிறார். ஆனால் அவர் எண்ணம் நிறைவேறும் முன்னமேயே, ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் கடலுக்குள் இருக்கும் ஆறுமுகனே வந்து, தான் இருக்கும் இடத்தை அறிவித்திருக்கிறார். ‘கடற்கரையிலிருந்து ஆறு காத துரம் சென்றால் அங்கு ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அந்த இடத்தைச் சுற்றி கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான்; அங்கு முங்கி மூழ்கினால் நான் உந்தி வந்து விடுவேன்’. என்று கூறியிருக்கிறான். வடமலையப்ப பிள்ளையும் குறித்த இடம் சென்று ஆறுமுகனைக் கடலின் அடித்தலத்திலிருந்து எடுத்து வந்து கோயிலில் நிறுத்தியிருக்கிறார். அன்று முதல் அங்கு கோயில் கொண்டிருப்பவனே அந்தப் பழைய ஆறுமுகன், ஆம், வடமலையப்பன் தேடி எடுத்த தேவதேவன், இதன் ஞாபகார்த்தமாக ஒரு நல்ல மண்டபத்தையும் கட்டி முடித்திருக்கிறார் அவர். அந்த மண்டபமே இன்றும் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.

இது ஏதோ கற்பனைக் கதை அல்ல. எம்.ரென்னல் என்னும் பிரெஞ்சு அறிஞர். 1785ல் ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் இருந்து வெளியிடப்பட்ட சரித்திர இந்தியா என்ற புத்தகத்தில் இந்தத்தகவலை ஒரு டச்சு மாலுமியிடம் இருந்து தான் தெரிந்து கொண்டதாக குறித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி 1648ல் நிகழந்தது என்றும் உறுதியாக உரைத்திருக்கிறார். 1648ல் கடலுக்குள் சென்ற ஆண்டவன் 1653ல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலமாக வெளிவந்திருக்கிறான். ஐந்து வருஷம் கடலுக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்து பக்தர்கள் உய்ய நல்ல தவம் பண்ணியிருக்க வேண்டும். தவத்தால் அடைந்த புதிய சக்தியோடு வெளிவந்து பக்தர்களுக்கு அருள் செய்ய திருவுளம் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களும் இந்தப் புனர் நிர்மாணத்தை 1953ம் வருஷத்தில் முன்னூறாவது ஆண்டு விழாவாகக் கொண்டாடி, ஆண்டவன் கருணையை நினைந்து வாழ்த்தி, மகிழ்ந்து இருக்கிறார்கள்.

இதை ஒட்டியே இன்னொரு வரலாறு. இப்படி கடலில் இருந்து எழுந்தருளிய ஆறுமுகனை அன்று முதல் வடமலையப்ப பிள்ளையன் மண்டபத்திலே எழுந்தருளச் செய்து அங்கு மண்டபப்படி நடத்துவது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்ம நாயக்கர் ஒரு புதிய மண்டபம் கட்டி திருவீதி, உலாப் போந்த ஆறுமுகப் பெருமானை, வடமலையப்பிள்ளையன் மண்டபத்திற்குக் கொண்டு செல்லாமல், நேரே தன் புதிய மண்டபத்திற்கே எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். பாளையக்காரரின் ஆதிக்கத்தை அறிந்த வடமலையப்ப பிள்ளையனோ, இதைத் தடுக்க முனையவில்லை என்றாலும் ஆண்டவன் அறியானா அவர் உள்ளம் துயர் உறுவதை. அவ்வளவுதான், இறைவன் திரு உலா வந்த போது காற்றும் மழையும் கலந்தடித்து அல்லோலகல்லோலப் படுத்தியிருக்கிறது. பல்லக்குத் தூக்கியவர்களோ மேலே செல்ல இயலாதவர்களாய்ப் பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திலேயே பல்லக்கை இறக்கி விட்டு உட்கார்ந்து விடுகிறார்கள். மழை நின்று புயல் ஓய்ந்தபின் பார்த்தால் பல்லக்குத் தங்கியிருக்கின்ற மண்டபம், பிள்ளையன் மண்டபமாக இருப்பதைக் காண்கிறார்கள். கட்டபொம்மன் தன் தவறை உணர்கிறார். பிள்ளையனிடம் மன்னிப்புக் கோருகிறார். பிள்ளையனும் ஐயன் கருணையை நினைந்து நினைந்து உருகுகிறார்.

இன்னும் ஒரு வரலாறு. ஆங்கில அன்பர்கள் சிலரையும் ஆண்டவன் பெற்றிருந்தான் என்பதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே திருநெல்வேலியிலே கலெக்டராக இருந்தவர் லஷிங்டன் துரைமகனார் (S.R.Lushinglion). அவரை, ஆண்டவன் ஆட்கொண்டிருக்கிறான். 1803ம் வருஷம் அவர் வெள்ளிப் பாத்திரங்கள் பலவற்றை இக்கோயிலுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர் திருச்செந்துரை அடுத்த வீரபாண்டியன் பட்டினத்திலேயே ஒரு பங்களாக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழர் தெய்வமான முருகன் ஆங்கிலேயர்களையும் தன் அன்புக்கு ஆளாக்கி இருக்கிறான் என்று காண்கிறோம் இவ்வரலாற்றில் இருந்து.

கொங்கணர் ஆரியர் ஒட்டியர்
கோசலர் குச்சலர் ஆம்
சிங்களர் சோனகர் வங்காளர்
ஈழர் தெலுங்கர் கொங்கர்
அங்கர் கலிங்கர் கண்ணாடர்
துருக்கள் அனைவருமே
தங்கள் தங்கட்கு இறை நீ
என்பர் பேரரிச் சரவணனே

                                                   -N2R நந்தகுமார்

Wednesday, 22 June 2022

கமலை / கவலையோட்டுதல் / ஏற்றம்

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடம் சூட்டுவதும்,
தலையிட்ட பொருள்நான்கும் தலைநீட்டப் படுவதுவும்,
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே.
           -ஏரெழுபது (துலையிட்ட நீரீன் சிறப்பு -40), கம்பர்.

விளக்கம்
கலையனைத்தும் கற்றறிந்த வேதம் ஓதும் அந்தணர்கள் அக்னி வளர்த்து யாகம் புரிவதும்;
மலை போன்ற வலிமையுடைய அரசர்கள் மணிமகுடம் சூடிக்கொள்வதும்;
சிறப்பு பொருந்திய வணிகர்கள் வாழ்வதற்காகப் பொருள் ஈட்டுவதும்; என
அனைவரும் நிலைபெற்று விளங்கும் விவசாயத் தொழில் புரியும் விவசாயிகளின் ஏற்றத்தைத் துணையாகக் கொண்டு பாய்ச்சிய நீரினால் மட்டுமே ஆகும்.

கமலை/கவலை


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)


  கமலை என்பது ஒரு கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனமாகும். இதைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.

  நன்செய்ப் பாசனத்திற்கு, ஆற்றுநீர் இல்லாவிடங்கட்குக் கண்ணாறுகளும் கால்வாய்களும் வெட்டிப் பாய்ச்சினர். அது இயலாவிடத்து ஏரிகளை வெட்டினர். ஏர்த்தொழிற்கு உதவுவது ஏரி. குளிப்பது குளம். இன்று ஏரியைத் தவறாகக் குளமென்பர் ஒரு சாரார். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம் பொய்கை எனப்படும். முல்லைநிலத்திற் புன்செய்ப் பாசனத்திற்குக் கிணறு களை வெட்டினர்.


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)

   எருதுகளைக் கொண்டு கிணற்றுநீரை இறைக்கும் ஏற்றம் கம்மாலை எனப்பட்டது. அம் = நீர், அம் - கம் = நீர். கம் + ஆலை = கம்மாலை. ஆலை சுற்றி வருவது. கம்மாலையென்பது இன்று கமலை என்றும் கவலை என்றும் திரிந்து வழங்குகின்றது.  இன்று எருதுகள் நேராகச் செல்வதால் கவலையோட்டுதல் என்றும் கூறுவர்.

எருது


  விதைக்கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து உழவர் பொருளீட்டலைக் குறிக் கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பதினெண் கூலங்களையும் அவற்றின் வகைகளையும், ஆண்டுதோறும் விளைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான நெல்வகைகள் விளைக்கப் பெற்றன. அவற்றுட் பெரும்பாலனவற்றை இன்று கண்ணாலும் காண முடியவில்லை; காதாலும் கேட்க முடியவில்லை. பொன் தினை, செந்தினை, கருந்தினை என்னும் மூவகையுள், இன்று பொன்றினையே காண முடிகின்றது. அவரை வகைகளுட் பல ஆண்டு தோறும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகின்றன. இன்று ஆட்சியை நடத்துபவருக்குப் பதவியைக் காக்க வேண்டு மென்பதேயன்றி, விதை வகைகளைப் பேணவேண்டு மென்னும் கலை நோக்கில்லை. 


   தமிழகத்தில் உழவுத்தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும், ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர் - ஏர்து-எருது. காட்டுமாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த்தொழிற்குப் பயன்படுத்தினர். 


   எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு என்றனர். 

"பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி" (புறம். 35) 

"பகடு நடந்த கூழ்" (நாலடி. 4)


உழவுத்தொழிலும் பாண்டியம் எனப்பட்டது.

"பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித்.136) 

பாண்டி எருது.

   எருதுகளை நிறம் பற்றியும் திறம்பற்றியும் பலவகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது "முழுப் புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு. கால் கருப்பு;" எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது. 

சால் பறி



  இது இரண்டு வகைப்படும் படத்தில் உள்ளது இரும்பு பறி, இன்னொரு வகை தோலினால் ஆன பறி இதில் இரும்பு பறி அதிக நாளைக்கு உழைக்கும் தண்ணீர் அதிகம் பிடிக்கும் தோல் பறி ஆனது குறுகிய நாளில் சேதாரம் ஆகி கிழிந்து விடும் தண்ணீர் குறைவாக தான் பிடிக்கும்

  இரும்பு பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் பெரியதாக இருக்கும் தோல் பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் சிறியதாக இருந்தாலே போதும்.


கமலை/கவலை செயல்படும் விதம்


  தண்ணீர் இறைக்க “கவலை”, (சில ஊர்களில் கமலை,ஏற்றம்,ஏத்து என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு ஒன்று முதல் இரண்டு கவலைகள் இருக்கும். சாதாரணமாக ஒரு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும். தண்ணீர் வசதி அதிகம் இருந்தால் நான்கு கவலைகள் கூட இருக்கும்

  ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். இரும்பு பறி அல்லது தோலினால் ஆன “பறி” என்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி ஏற்று உருளை மூலம் முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். ( கிணற்றில் வாளி மூலமாக தண்ணீர் சேந்துகிற மாதிரி)

  அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள்.இதுவும் நிலத்து மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் சிறிய உருளை மூலம் சிறிய வடக்கயிறும் வால்க்கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும்.

  அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும். இதில் மனித உழைப்பிலும் மாட்டின் உழைப்பிலுமே கிணற்று நீர் வெளியே வந்து சேர்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

  ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் தண்ணீர் வசதி அதிகம் இருக்கும் காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.

  ஆனால் இரண்டு எருதுகளும் திறமைசாலியாக இருக்கவேண்டும்

  அப்பொழுது எல்லாம் சிறு தானிய பயிர்களை மட்டுமே சாகுபடி செய்தார்கள் அதுவும் குறுகிய நாளில் வரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம்,மிளகாய் போன்ற வகைகள்தான் அதிகம் நெல் நடவு செய்யமுடியாது இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் தேவையான தண்ணீரை பாய்ச்சமுடியாது.

கமலையின் மகத்துவம்

  நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).

  பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.

  பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மின் எக்கி

  வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.

  மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் கமலைகள் காணாமல் போயின. படிப்படியாக ஏற்றம் மூலம் தண்ணீர் பாய்ச்சு வதை நிறுத்தியதால் தற்போதுள்ள இளைஞர்களுக்கோ, காளை களுக்கோ ஏற்றம் மூலம் தண்ணீர் இறைக்கத் தெரியாமல் போய் விட்டது.

                                                                                         எழுத்து,                                                                                                          N2R நந்தகுமார்

Friday, 11 December 2020

tamil


நீங்க நல்ல படிச்சா உங்க இங்கிலீஷ் டீச்சர விட நல்ல இங்கிலீஷ் பேசலாம்...

நீங்க எவ்வளவு நல்லா படிச்சாலும் உங்க தமிழ் வாத்தியரை விட சிறப்பா தமிழ் பேசமுடியாது...

-N2R நந்தகுமார் 

Saturday, 27 June 2020

பெண்களை திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா ??

    வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாககுறைந்து விட்டது..முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியாக ஆடினார்கள். இப்போது செல்போன் கையுமாகவே சுற்றுகிறார்கள். படிப்படியாய் குறைந்து தற்போது காணாமல் போய்விட்டது இந்த பழக்கம்…இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்…

   இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் விழாக்கள் இன்றும் உண்டு ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள நெகடிவ் எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றதது திருமணங்களில் ஊஞ்சல் சடங்கு’ இதன்
அடிப்படையிலேயே உருவானது.


    ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் அடையும்…நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு சைடுகளிலும் உள்ள சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. கணிணியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய தலைமுறையினர் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று
க ழுத்துவலி போன்ற பிரச்சனைகள் வராது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும்.


    தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது…மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு(ஆக்சிஜன்) வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை கொடுத்து இ தயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இ த ய நோய் கட்டுப்படும். ஊஞ்சல் ஆடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு இரத்தம் சீராக செல்லும்.

   சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இது உதவும். உணவு மண்டலம் சீரடையும்.. கோ பமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோ பம் குறையும்.. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக அமைதியாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள் வீட்டுக்குள் வரும் தேவதைகள் வீட்டின் முன் இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், என்று சொல்லி வைத்தார்கள்.

   ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இப்போது ஊஞ்சலை பார்ப்பது அரிதாக உள்ளது. வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது என்று பலரும் கூறுகின்றனர்.

N2R நந்தகுமார்
Channel N2R

Sunday, 25 November 2018

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தேங்காய் உடைத்தால் ஆபத்தா? பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் !!



🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. உடைக்கும் அதிர்ச்சி நுண்ணலைகள் மூலம் கர்ப்பத்தைத் பாதிக்கும்.

🌟 இரவில் வீட்டைப் பெருக்கலாகாது. பெருக்கினாலும் குப்பையை தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாளில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

🌟 அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வேலைக்காரர்களை வைத்து கோலமிடக்கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

🌟 சாப்பிடுவதற்கு இலை போடுவதற்கு முன் இலைக்குக் கீழே பசும் சாணி அல்லது வெறும் ஜலத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

🌟 எந்தப் பொருளையும் இல்லை என்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும். இந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்றே கூற வேண்டும்.

🌟 எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது, அழுத வீட்டில் செல்வம் நிற்காது.

🌟 வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போது அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும்.

🌟 கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக்கூடாது.

🌟 பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக்கூடாது.

🌟 அம்மி, உரல் மீது அமரக்கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக்கூடாது.

🌟 அன்னம், உப்பு, நெய், காய்கறிகளை கையால் பரிமாறக்கூடாது.

🌟 மாலை நேரங்களில் தீபம் ஏற்றி நமஸ்கரிக்கும் பெண்மணிக்கு ஆசிகூறத் தேவர்கள் இல்லங்களுக்கு வருகின்றார்கள். எனவே தீபம் வைக்கும் நேரத்தில் பெண்கள் வேறு இடங்களுக்குச் செல்லக்கூடாது.

🌟 பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக்கூடாது.


N2R நந்தகுமார்

Wednesday, 26 September 2018

உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் !


‘ஹூம்… எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்! கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா. 

இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை!

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது… கர்வம்! ‘நான்’ என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர். கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், ‘கர்வம் கூடாது; தலைக்கனம் வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்; கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார்; பதவியை இழந்தார்; பணியை இழந்தார்; வெறுமனே இருந்தார்.

‘சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க… பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.

நிபந்தனையா? அதென்ன…?

‘இழந்த ஆற்றலையும் தேஜஸையும் வழங்குங்கள் ஸ்வாமி’ என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ‘நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், ‘கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், ‘விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!

திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு… பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!

தலத்தின் நாயகி-  கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!

குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்… சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.

ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே… சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.

இன்னொரு விஷயம்… பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான… அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் ‘பதஞ்சலி பிடவூர்’ என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி

மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர்.

இந்த வேளையில்… நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!

மஞ்சள் காப்பு… புளியோதரை!

வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்!

7ஆம் தேதி பிறந்தவரா?

ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம்! இந்த ஏழு நிலைகளைக் கடந்து, சுமார் 300 அடி தூரத்தில் மூலவரான பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதியில், பங்குனியில், சூரிய பகவான் தனது வெளிச்சக் கதிர்களால் சிவனாரை வழிபடுகிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி, ஏழு நிலை கோபுரத்தைக் கடந்து, ஏழு நிமிடங்கள்… சிவனாரின் மீது சூரிய ஒளி படும். ஆகவே 7-ஆம் தேதி பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பர். அதுமட்டுமா? ஜாதகத்தில் 7-ஆம் இடத்தைப் பொறுத்தே ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் நல்ல நண்பர்கள் அமைவார்கள். எனவே தோஷ நிவர்த்திக்காகவும் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்மாவை வழிபடுகின்றனர்.

ஜென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது விசேஷம்!

மாதந்தோறும் வருகிற… உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில்,  பிரம்மாவை தரிசித்தால், செல்வம் பெருகும்; ஐஸ்வரியம் கொழிக்கும்; இழந்ததைப் பெறுவீர்கள்!

எங்கே இருக்கிறது?

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உண்டு; ஆனாலும் குறைவுதான்!

சமயபுரத்தில் இருந்து சிறுகனூர் வரை பேருந்து வசதி நிறையவே உண்டு. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

கோயில் தொடர்புக்கு:
94438 17385 / 98949 26090

N2R_NandhakumaR
Channel N2R
ENN2AAR Groups

Saturday, 22 September 2018

இலிங்காஷ்டகம் | Lingashtagam - ஸ்லோகமும் பொருளும்.


இலிங்காஷ்டகம்  

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் 
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

 ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் 
ராவண தர்ப வினாஷன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

 காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

 ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

ஸர்வ  ஸுகந்த ஸுலேபித லிங்கம் 
புத்தி விவர்த்தன காரண லிங்கம் 
சித்த சுராசுர வந்தித லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

 கனக மஹாமணி பூஷித லிங்கம் 
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் 
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

 தக்க்ஷ  ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

குங்கும சந்தன லேபித லிங்கம் 
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்
  
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் 
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் 
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் 
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் 
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் 
பராத்பரம் பரமாத்மக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே. லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால் சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும் சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.  

N2R_NandhakumaR

Friday, 14 September 2018

பகவானுக்கும் பக்தனுக்கும் போட்டி


ஆயிரக்கணக்கில்‌ நந்த குமாரன் விஷமங்கள் செய்த போதிலும், அவர்கள் வீட்டில்‌ சென்று த்வம்சம்‌ செய்த போதிலும், அவனது அத்தனை லூட்டிகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அவன் மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் கோகுல வாசிகள்.

எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தாலும், ஒரு புறம் புகார்களாக  அடுக்கிய போதும், மற்றொரு புறம் அவன் வரவில்லையென்றாலோ, அவனைப் பார்க்கவில்லையென்றாலோ ஏங்கிப்‌போவார்கள்.
பழம் விற்கும் ஏழைப்பாட்டியின் குரல் கேட்டு, வாசலில் ஓடி வந்தான் கண்ணன்.

பாட்டீ, நில்லுங்க..

பழம் வேணுமா சாமீ...

எனக்குத் தருவீங்களா?

குட்டிக் கண்ணனின் அழகு அவளை என்னவோ‌செய்தது. போதாகுறைக்கு பாட்டி என்று உறவு கொண்டாடுகிறான்.
உறவுகள் ஏதுமின்றி, தனியாக பழங்கள் விற்று வயிற்றைக் கழுவிக் கொள்பவளுக்குப் புதிய உறவு. அதுவும் இறைவனோடு.
சின்னக் கண்ணன் ‌இதழ்களைக் குவித்துக் குவித்துப் பேசும் எழிலைக் காண்போர் பேச்சற்றுப் போவாரன்றோ.

உங்களுக்குதான் எல்லமே...

அப்படியா? எல்லமே ‌எனக்கா?
ஆமாங்க துரை.. எல்லாம் உங்களுக்குத் தான்..

இருங்க வரேன்..

உள்ளே ஓடிச்சென்று இரண்டு பட்டுக் கரங்கள் நிறைய தானியங்களை அள்ளிக்கொண்டு வந்தான்.

தத்தித் தத்தி  அவன் ஓடி வரும் வேகத்தில், கைஇடுக்குகள் வழியாக தானியங்கள் சிந்திக்கொண்டே வந்தது.
மூன்றாம் கட்டிலிருந்து வாசலுக்கு வருவதற்குள் எல்லா தானியங்களும் கீழே சிந்திவிட,

இந்தாங்க பாட்டி, நீங்க எனக்கு சும்மா தரவேணாம். இதை எடுத்துக்கோங்க.

கையை நீட்டியது.
கீழே இரைந்ததுபோக மீதி சில தானியங்கள் கைகளில் மிஞ்சியிருந்தன.

சரிங்க சாமீ,  உங்க கையால எது கொடுத்தாலும் போதும்..

கூடையை நீட்டினாள். கண்ணன் தாமரைக் கைகளைக் கூடையில் உதற, அக்ஷயமான செல்வங்களை அளிக்கும் வரத ஹஸ்தங்களிலிருந்து, கூடையில் விழுந்த தானியங்களை பழைய துணியில் சுற்றி வைத்துக்கொண்டாள். கொண்டு வந்த அத்தனை பழங்களையும் கண்ணன் கை நிறைய அடுக்கினாள்.

உண்மையில், பழங்களை விற்றால்தான் அன்றைய உணவு என்ற நிலையில், அவள் மனம் கண்ணனைப் பார்த்ததும் நிறைந்துவிடிருந்தது.
பசியும், பட்டினியும் பழகிப்போனவைதாம். ஆனால், இப்பேர்ப்பட்ட குழந்தை பாட்டீ,‌பாட்டீ என்று பத்து தடவைக்கு மேல் அழைத்தானே..
நினைத்துக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்தாள்.

வீட்டுக்குச் சென்றால் அவளது கூடை நிறைய விலை உயர்ந்த ரத்தினங்கள் நிரம்பியிருந்தன.

இரண்டு‌ நாட்கள் சென்றன. பழம்‌ விற்கும் பாட்டியின் ஏழ்மையைப் போக்கிவிட்ட சந்தோஷம் கண்ணனுக்கு. இனி அவள் வாழ்நாள்‌ முழுதும் உட்கார்ந்து  சாப்பிடலாம். தள்ளாத வயதில் வீதிவீதியாய் அலைய வேண்டியதில்லை.

மூன்றாம் நாள் காலை..
பழம் வாங்கலியோ.. பழம்...

அதே பாட்டியின் குரல்தான்.
ஓடி வந்தான் கண்ணன்.

ஏன் பாட்டீ, உங்களுக்கு அவ்வளவு ரத்தினம் தந்தேனே. பாத்தலியா ?

நீங்க குடுத்தீங்க சாமீ.. இதோ பாருங்க.. கூடை நிறைய பழங்களுக்கு அடியில் கண்ணனுகான நகைகள்.
நீங்க பாட்டீ பாட்டீன்னு கூப்பிட்டீங்க.. பாட்டியால முடிஞ்சது. எல்லாம் நீங்க தந்ததுதான். இதெல்லாம் நான் வெச்சுட்டு என்ன செய்யப்போறேன்? எனக்கு ஒரு கால் வயத்துக் கஞ்சி போதுமே...
சொல்லிக்கொண்டே அத்தனை நகைகளையும் கண்ணனுக்குப் பூட்டி அழகு பார்த்தாள்.

கண்ணனுக்கு ஒரே புதிராய்ப் போனாள் அவள். ஏழையாய் இருக்கிறாள். செல்வத்தைக் கொடுத்தால், எனக்கே ‌திருப்புகிறாளே..
கொஞ்சம் அசந்துதான் போனான் கண்ணன்.

மறுநாள் காலை மறுபடியும்
பழம் வாங்கலியோ.. பழம்...

பாட்டியின் குரல் கேட்டு, கண்ணன் மிகவும் ஆச்சாரியப்பட்டான்.

ஓடி வந்தான். இப்போது பாட்டியைப் பார்க்கக் கண்ணனுக்கு ஆவல்.
பாட்டீ உங்க வீடு..?

ஆமா சாமீ, நீங்க என் குடிசையைவே அரணமனை போலாக்கிட்டீங்க...

அது பத்தலையா பாட்டீ? மறுபடி ஏன் பழம் விக்கறீங்க..

அதிருக்கட்டும். நீங்க என் கூட என் வீட்டுக்கு வருவீங்களா‌ சாமீ?

ஓ வரேனே...

ப்ரம்மம் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு தளர்நடை நடந்து சென்றது.
அங்கே...
ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டில் கண்ணனின்  அழகான சித்திரம் வைத்து கோவில்போல் செய்து, ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன.அதன் எதிரே சிறிய குடிசை போட்டுக் கொண்டாள் அவள்.

என் ஒருத்திக்கு எதுக்கு சாமீ மாளிகை? சாமிக்குதான் எல்லாம்.என்றாளே

அவளது பக்திக்கு ஈடு செய்யமுடியாத கண்ணன் திணறிப்போனான்.

பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள போட்டி, பக்திக்கும் கருணைக்கும் உள்ள போட்டி. அதில் பகவான் எப்போதும்  தன்னைத் தோற்பவனாகவே கருதுகிறான். அதனாலேயே பக்தனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தன் நிலையை விட்டு  இறங்கியும் வருகிறான் அல்லவா..?

* N2R NandhakumaR*

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...