தமிழகத்தில் உழவுத்தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும், ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர் - ஏர்து-எருது. காட்டுமாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த்தொழிற்குப் பயன்படுத்தினர்.
எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு என்றனர்.
"பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி" (புறம். 35)
"பகடு நடந்த கூழ்" (நாலடி. 4)
உழவுத்தொழிலும் பாண்டியம் எனப்பட்டது.
"பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித்.136)
பாண்டி எருது.
எருதுகளை நிறம் பற்றியும் திறம்பற்றியும் பலவகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது "முழுப் புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு. கால் கருப்பு;" எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது.
சால் பறி
இது இரண்டு வகைப்படும் படத்தில் உள்ளது இரும்பு பறி, இன்னொரு வகை தோலினால் ஆன பறி இதில் இரும்பு பறி அதிக நாளைக்கு உழைக்கும் தண்ணீர் அதிகம் பிடிக்கும் தோல் பறி ஆனது குறுகிய நாளில் சேதாரம் ஆகி கிழிந்து விடும் தண்ணீர் குறைவாக தான் பிடிக்கும்
இரும்பு பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் பெரியதாக இருக்கும் தோல் பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் சிறியதாக இருந்தாலே போதும்.
ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். இரும்பு பறி அல்லது தோலினால் ஆன “பறி” என்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி ஏற்று உருளை மூலம் முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். ( கிணற்றில் வாளி மூலமாக தண்ணீர் சேந்துகிற மாதிரி)
அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள்.இதுவும் நிலத்து மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் சிறிய உருளை மூலம் சிறிய வடக்கயிறும் வால்க்கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும்.
அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும். இதில் மனித உழைப்பிலும் மாட்டின் உழைப்பிலுமே கிணற்று நீர் வெளியே வந்து சேர்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்
ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் தண்ணீர் வசதி அதிகம் இருக்கும் காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.
ஆனால் இரண்டு எருதுகளும் திறமைசாலியாக இருக்கவேண்டும்
அப்பொழுது எல்லாம் சிறு தானிய பயிர்களை மட்டுமே சாகுபடி செய்தார்கள் அதுவும் குறுகிய நாளில் வரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம்,மிளகாய் போன்ற வகைகள்தான் அதிகம் நெல் நடவு செய்யமுடியாது இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் தேவையான தண்ணீரை பாய்ச்சமுடியாது.
கமலையின் மகத்துவம்
நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).
பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.
பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
மின் எக்கி
வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.
மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் கமலைகள் காணாமல் போயின. படிப்படியாக ஏற்றம் மூலம் தண்ணீர் பாய்ச்சு வதை நிறுத்தியதால் தற்போதுள்ள இளைஞர்களுக்கோ, காளை களுக்கோ ஏற்றம் மூலம் தண்ணீர் இறைக்கத் தெரியாமல் போய் விட்டது.
எழுத்து, N2R நந்தகுமார்