Thursday, 8 August 2024

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!


  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக உயர்த்தி அறிவித்தது. இதை எதிர்த்து கோயம்புத்தூர் மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். 1970 ம் ஆண்டு மே 09 ல் பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள் மற்றும் டிராக்டர்களில் விவசாயிகள் கோயம்புத்தூரில் பேரணி நடத்தினார்கள். நகரம் அதிர்ந்தது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைத் திரும்பப் பெறா விட்டால், ஜூன் 15 ல் அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டமும், ஜூன் 19 ல் பந்த் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 போராட்டத்தின் உச்சத்தில் அரசாங்கம் ஒடுக்கு முறையை ஏவி, மூன்று விவசாயிகளின் உயிரைப் பறித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அரசைப் பணியவைத்தன. மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. கடன் வசூல் தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டது.

  காயங்கள் ஆறுவதற்கு முன்பாகவே மாநில அரசு மீண்டும் மின்சாரக் கட்டணத்தை 9 பைசாவிலிருந்து 12 பைசாவுக்கு உயர்த்தி, 01.01.1972 முதல் புதிய கட்டணத்தை அமல் படுத்த உத்தரவிட்டது. இதை எதிர்த்து கோவை மாவட்ட விவசாயிகள் முதலில் கிளர்ந்தெழுந்தனர். 1972 மார்ச்சில் 12 அம்சக் கோரிக்கைகளை, அரசிடம் முன்வைத்து நிறைவேற்றக் கோரினார்கள் விவசாயிகள்.

  15.04. 1972-க்குள் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கெடு விதித்தார்கள். மே 9-ல் மறியல் போராட்டம் தொடங்கியது. போராடிய விவசாயிகள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். நகரவாசிகள் தினமும் நுகரும் காய்கறிகளையும் பாலையும் விவசாயிகள் நகரங்களுக்கு அனுப்புவதை 02.06.1972 முதல் 04.06.1972 வரை நிறுத்தினார்கள்.

  இதன் மூலம் தட்டுப்பாடு ஏற்படுத்தி, அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதே நோக்கம்.

  இதற்குப் பின்னும் அரசு பணியாததால் கோவை விவசாயிகள் 07.06.1972-ல் புதுமையாக மாட்டு வண்டிப் போராட்டத்தை நடத்தினார்கள். மாவட்டத்தின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் புறப்பட்ட பல்லாயிரக் கணக்கான மாட்டு வண்டிகள், கோவை நகரின் சாலைகளிலும் சந்துபொந்துகளிலும் மத்திய சிறைச்சாலைக்கு முன்பும் நிறுத்தப்பட்டன. கோவை நகரம் ஸ்தம்பித்தது. அமெரிக்காவிலிருந்து வெளிவரும் 'தி நியூயார்க் டைம்ஸ்' உள்ளிட்ட உலகப் பத்திரிகைகள் அவர்களைப் பாராட்டி 'மாட்டு வண்டிகள் இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்' என்று இந்தப் போராட்டச் செய்தியை வெளியிட்டன. 

  போராட்டத்தின் வீச்சை உணர்ந்த அரசு பணிந்து 1972 ஜூலை 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை அரசுடன் பேச்சு வார்த்தை நடந்தது. அதன்படி ஜூலை 19-ல் ஒப்பந்தம் ஏற்பட்டது. தற்காலிகமாக மின் கட்டண உயர்வு பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டது. மின் கட்டணத்தில் யூனிட் ஒன்றுக்கு 1 பைசா குறைக்கப்பட்டது. சிறையில் இருந்த அனைத்து விவசாயிகளும் விடுவிக்கப்பட்டார்கள்."

  தொடர்ந்து மாநில அரசாங்கத்தை இடைநீக்கம் செய்து கவர்னர் ஆட்சி முடிந்த பின் 1980 லிருந்து 1988 வரை எம்.ஜி.ராமச்சந்திரன் முதல்வராக இருந்த அதிமுக அரசு தமிழகத்தில் முதன் முதலாக 1983 ஆம் ஆண்டு குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெச்.பி. குதிரைத் திறன் கொண்ட பம்புசெட் மோட்டாருக்கு மின் இணைப்புக்கு இலவச மின்சாரம் தரப்பட்டது.

  இன்னுயிரைத் தந்த அந்த தியாகிகளின் பெயர்களை முடிந்தளவு வரிசைப்படுத்துகிறேன்.

1. ஆயிகவுண்டர் (33) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
2. மாரப்பக்கவுண்டர் (37) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
3. இராமசாமி (25) 19.06.1970 பெருமாநல்லூர், கோவை மாவட்டம்
4. ஆறுமுகம் (25) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
5. முத்துச்சாமி (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
6. சாந்தமூர்த்தி (20) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
7. மணி (30) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
8. இராமசாமி (முத்து) (32) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
9. பிச்சைமுத்து (21) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
10. கோவிந்தராஜுலு (16) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
11. விவேகானந்தன் (35) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
12. இராமசாமி (23) 05.07.1972 பெத்தநாயக்கன் பாளையம், சேலம்
13. முத்துக்குமாரசாமி (22) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா

*14. சுப்பையன் (32) 05.07.1972 அய்யம்பாளையம், பல்லடம் தாலுகா*

15. கந்தசாமி நாயக்கர் (55) 05.07.1972 பழைய அப்பநேரி, கோவில்பட்டி தாலுகா
16. சீனிவாசன் (18) 05.07.1972 சாத்தூர் தாலுகா, இராமநாதபுரம் ஜில்லா
17. கந்தசாமிரெட்டியார் (42) 05.07.1972 அருப்புக்கோட்டை, சாத்தூர் தாலுகா
18. நம்மாழ்வார் (20) 05.07.1972 சூலக்கரை, சாத்தூர் தலுகா
19. கிருஷ்ணசாமி நாயக்கர் - - கோவை சிறையில்
20. பெரியகருப்பன் - - திருச்சி சிறையில்

 தியாகிகளுக்கு அய்யம்பாளையம், கோவில்பட்டி ஆகிய பல ஊர்களில் நினைவுத்தூண் நிறுவப்பட்டு ஆங்காங்கே இவர்களின் நினைவு நாளன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது.

05.07.1972 அன்று விவசாயிகள் போராட்ட துப்பாக்கி சூட்டில் விவசாயிகளுக்காக களச்சாவு கண்ட விவசாயிகளின் தியாகி. சுப்பையன் அவர்களின் தவப்புதல்வன் திரு. ராஜேந்திரன் அவர்கள் 07.08.2024 அன்று இறைவணடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து, பல்லடம் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் சார்பில் இன்னாரது ஆன்மா இறைவணடி சேர வேண்டுகிறோம்.


Monday, 18 December 2023

மார்கழி மாதத்தின் சிறப்புகள் என்ன தெரியுமா....?

மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம்.

  தமிழ் மாதங்களில் மார்கழி என்பது இறைவனுக்கு உரிய மாதமாக விளங்குகிறது. மற்ற மாதங்களில் ஒரு நாளோ, ஒரு கிழமையோ மட்டுமே  இறைவனுக்கு உகந்ததாக இருக்கும். ஆனால் மார்கழியில் மட்டும் அந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.

  மார்கழி மாதத்தை தேவர் மாதம் என்று குறிப்பிடுவர். அதாவது கடவுளை வழிபடும் மாதமாகும். இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளதால், இம்மாதத்தில் எவ்வித மங்கல நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவதில்லை.
 
  சைவ ஆலயங்களிலும், வைணவ ஆலயங்களிலும் சூரிய உதயத்திற்கு முன்னதாகவே பூஜை, ஆராதனை நடத்தப்படும். மேளதாள  வாத்தியங்கள் முழங்கப்படும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும்.  விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர்.

   மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள காலம் பகல் எனவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள காலம் இரவு எனவும் ஆகும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். சூரிய உதயத்துக்கு முன்பான இந்தக் காலம் பிரம்ம முகூர்த்தம் என்று அழைக்கப்படும்.

மார்கழி மாதம் சூரியன் பூமிக்கு மிக அருகில் இருப்பதால் சூரிய கதிர்கள் பூமியில் பட்டுத் தெறித்து ஈர்ப்பு விசை மிக அதிகமாகும். இதனால் தான் மார்கழி மாதம் மனித உடலின் சக்தி மையம் கீழிருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படுகிறது. மார்கழி தான் மனித உடம்பில் சமநிலையையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கு உசிதமான நேரம். 

  அறிவியல் உண்மைகளை ஆன்மீக வழியில் நமக்கு கொடுத்து சென்ற நம் முன்னோர்கள் வழியில் இந்த அற்புதமான மாதத்தை தவறவிடாமல் அதிகாலை எழுந்து கோவிலுக்கு சென்று முழு பலனையும் அடைந்து மன நிறைவுடன் வழ மார்கழியை கொண்டாடுவோம்! மார்கழி வாழ்த்துக்கள்!!

- N2R நந்தகுமார்

Saturday, 18 November 2023

சூரசம்ஹாரம் வரலாறு

தமிழ் கடவுள் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் சில வரலாற்று நிகழ்வுகளை எமது அப்புச்சி (கொங்கு தமிழில் தாயாரின் தந்தையை அழைக்கும் சொல்) முருகபத்தர். சுப்பையகவுண்டர் எமது சிறு வயதில் கூற கேட்டு இந்த இந்த வலைப்பதிவை பதிவிட்டு அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
முருகனுடைய வரலாறுகள் பலப்பல. அவற்றில் சிறப்புடையது அவன் தேவர்களுக்கு இடையறாது இடையூறு செய்த சூரபதுமன், சிங்கமுகன், பானுகோபன் முதலியவர்களை எல்லாம் கொன்று குவித்து தேவர்களுக்கும் மக்களுக்கும் அருள் புரிந்ததே. அசுரர்கள் என்றால் ஏதோ விகார உருவம் படைத்தவர்கள் என்பது மாத்திரம் அல்ல. நமது உள்ளத்திலே உதிக்கும் அகங்காரம், காமம், குரோதம் முதலியவைகளைத் தான் உருவகப்படுத்தி அசுரர்கள் என்று கூறப்படுகிறது. இந்த அசுரர்களைத் தொலைத்து சூரசம்ஹாரம் நடத்துவதற்கு, முருகன் அருள் பாலிக்கத்தானே வேண்டும்.

சூரசம்ஹாரம் புராணங்களில் எல்லாம் ஒரே விதமாகக் கூறப்படவில்லை. ‘ஏதிலாக் கற்பம் எண்ணில சென்றன, ஆதலால் இக்கதையும் அனந்தமாம்’ என்று சொல்லி கந்த புராண ஆசிரியர் இத்தனை கதைகள் அந்தப் புராணங்களில் இருப்பதற்கு சமாதானம் சொல்லி விடுகிறார். ஆனால் எல்லோரும் ஒப்புக் கொள்ளும் கதைதான் கந்த புராணத்தில் சொல்லப்படுகிறது. கதை இதுதான்.

பிரம்மாவின் புத்திரன் தக்கன் ஒரு வேள்வி செய்கிறான். அந்த வேள்வியிலே தன் மருமகன் ஆம், தாக்ஷாயணியின் கணவன், சிவபிரானுக்கு அழைப்பில்லை. அங்கு அவன் கெளரவிக்கப்படவும் இல்லை. இது தெரியாமல், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், முதலிய தேவர்கள் எல்லாம் அந்த வேள்விக்குச் சென்று விடுகிறார்கள். இது காரணமாக சிவனுடைய அம்சமான வீரபத்திரனால் இவர்கள் எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள். காணும் காணாததற்கு, சூரபதுமன் முதலிய அசுரர்களாலே துன்புறுத்தவும் படுகிறார்கள். தேவர்கள் தங்கள் துயரம் தாங்க முடியாமல் சிவபிரானிடமே சென்று முறையிடுகிறார்கள். சிவபெருமானும் அவர்கள் துன்பத்தை நீக்க ஒரு குமாரனைத் தருவதாக வாக்களிக்கிறார். சொன்ன சொல்லைக் காப்பாற்ற தன்னுடைய ஐந்து திருமுகங்களோடு அதோ முகமும் கொள்கிறார். ஆறு திருமுகத்தில் உள்ள ஆறு நெற்றிக் கண்களில் இருந்து ஆறு பொறிகள் கிளம்புகின்றன. அந்தப் பொறிகளை வாயு ஏந்திச் சென்று அக்னியிடம் கொடுத்து விட்டுத் தப்பித்துக் கொள்கிறான். அக்னியும் அந்தப் பொறிகளின் வெம்மையைத் தாங்காது கங்கையிலேயே விட்டு விடுகிறான். கங்கை இந்தப் பொறிகளை சரவணப் பொய்கையில் கொண்டு சேர்க்கிறாள். அங்கு ஆறு பொறிகளும் ஆறு திருக் குழந்தைகளாக மாறுகின்றன. இது நடந்தது வைகாசி மாதத்தில் விசாக நாளில். இப்படித்தான் விசாகன், பிறக்கிறான் இவ்வுலகிலே.

ஆறு குழந்தைகளையும் கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி வளர்க்கிறார்கள். இந்த கார்த்திகேயனைக் காண சிவபெருமான் உமையம்மையொடு சரவணப் பொய்கைக்கு வருகிறார். அங்கு அம்மை குழந்தைகள் அறுவரையும் சேர்த்து எடுத்து அணைக்கிறாள். தன் மார்பகத்தில், ஆறு குழந்தைகளும் சேர்ந்து ஆறுமுகத்தோடு கூடிய ஒரே பிள்ளையாக மாறுகிறான். கந்தன் எனப் பெயர் பெறுகிறான். ஆறுமுகன் என்று எல்லோராலும் அருமையாக அழைக்கப்படுகிறான்.

அருவமும் உருவம் ஆகி
அநா தியாய் பலவாய் ஒன்றாய்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனியாகி
கருணை கூர் முகங்கள் ஆறும்
கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒரு திருமுருகன் வந்து அங்கு
உதித்தனன் உலகம் உய்ய

என்று அறுமுகனது அவதாரத்தைக் கூறுகிறது கந்த புராணம்

இப்படி எல்லாம் பிறந்து கந்தன் வளர்கின்ற போது சூரபதுமனும் தேவர்களை எல்லாம் பிடித்துச் சிறையில் அடைத்துத் துன்புறுத்துகிறான். உடனே கந்தன் தன் கடமையைச் செய்ய முனைகிறான். தன் தந்தையின் கட்டளைப்படி அவனுடன் புறப்படுகிறார்கள் நவவீரர்களும் மற்றவர்களும் எண்ணிறந்த படைக்கலங்களை ஏந்திக் கொண்டு. அன்னையும் பாலகனுக்கு நல்லதொரு வேல் கொடுத்து ஆசி கூறி அனுப்புகிறாள். (சூரனை வேல் கொண்டு சம்ஹாரம் செய்யும் முருகன், தனது அன்னையிடம் வெற்றி வேலினை வாங்குவார். இந்த நிகழ்ச்சி கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளன்று நடைபெறும். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்த நிகழ்வு நேற்று நடைபெறும் பொழுது முருகனின் முகத்தில் வியர்வை பெருகும்.) இந்தப் படையெடுப்பில் முதலில் இலக்கானவர்கள் நரகாசுரனும், கிரெளஞ்சமலையும் தான். இவர்களை வெற்றி காணுவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லைதான். அதன் பின் தன் சேனா வீரர்களுடன் மண்ணியாற்றின் கரையை அடைந்து, அங்கு சிவனை எழுந்தருளச் செய்து வணங்கி, தன் படைக்கலங்களை இன்னும் பெருக்கிக் கொள்கிறான். சேயன் அமைத்த சிற்றூர் சேய்ஞலூர் என்று பெயர் பெறுகிறது. அங்கிருந்து புறப்பட்ட முருகன் நவவீரர்களுடன் நேரே வந்து விடுகிறான் திருச்செந்துருக்கு. ஏன்? அதை அடுத்த வீரமகேந்திரத் தீவில் கட்டிய கோட்டையைத் தானே தன் கேந்திர ஸ்தானமாகக் கொண்டு சூரபதுமன் ஆட்சி புரிகிறான். நவவீரர்களில் சிறந்த வீரபாகுத் தேவரைத் தூதனுப்புகிறான், சிறையிலிருக்கும் தேவர்களை எல்லாம் விடுதலை செய்யச் சொல்லி, சூரபதுமன் இணங்கவில்லை. போருக்கே புறப்பட்டு விடுகிறான் தன் இளைஞரோடும் வீரரோடும். குமரனும் குமுறி எழுந்து தன்னை எதிர்த்த வீரர்களையும் சிங்கமுகாசுரனையும் கொன்று குவிக்கிறான். ஆறுநாள் நடக்கிறது போர். கடைசியில் போர் முருகனுக்கும் சூரபதுமனுக்குமே நேருக்கு நேர் ஏற்படுகிறது. அந்தப் போரிலே அன்னை தந்த வேலைப் பிரயோகித்து, சூரசம்ஹாரத்தையே முடிக்கிறான். வேற்படையால் இருகூறாகிறான் சூரபதுமன். மயிலாகி வந்த கூறைத் தன் வாகனமாகவும் சேவலாகி வந்த கூறை தன் கொடியாகவும் அமைத்துக் கொண்டு தன்னுடைய உண்மையான உருவத்தைக் காட்டுகிறான் கார்த்திகேயன். இப்படி, மணம் புரிந்த தெய்வயானையையும் வள்ளியையும் தனக்கு மிகவும் உகந்த இடமான திருச்சீரலைவாய்க்கே கூட்டி வந்து தன் பக்கத்தில் நிறுத்திக் கொள்கிறான் பக்தர்கள் எல்லாம் கண்டு களிக்க.

கொங்கை குறமங்கையின்
சந்த மணம் உண்டிடும்
கும்ப முனி கும்பிடும்
தம்பிரானே

இந்தச் செந்திலாண்டவன் கோயிலில் உள்ள ஆறுமுகனைப் பற்றி அருமையான வரலாறு ஒன்று உண்டு. அதையும் தெரிந்து கொள்ளலாம் தானே.

1648ம் வருஷம் மேல் நாட்டிலிருந்து வந்த டச்சு வர்த்தகர்கள் இங்கு வந்து தங்கியிருக்கிறார்கள். என்றோ ஒரு நாள் ஆறுமுகப் பெருமானின் திரு உருவை அவனிருக்கும் வண்ணத்திலேயே கண்டுகளித்திருக்கிறார்கள். அவர்களுடைய களிப்புக்குக் காரணம், அவன் சூரபதுமனை சம்ஹரித்த மூர்த்தி என்பதினால் அல்ல. அந்த மூர்த்தி உருவாகியிருக்கும் உலோகம் பொன்னாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் தான். அந்த மூர்த்தியை எடுத்துச் சென்று உருக்கினால் அளவற்ற செல்வம் கிடைக்குமே என்று எண்ணியிருக்கிறார்கள். கோயில் நிர்வாகிகள் ஏமாந்திருந்த போதோ, அல்லது நல்ல நடுநிசியிலோ மூர்த்தியைக் களவாடி தங்கள் கப்பலில் ஏற்றி இரவோடு இரவாக கடல் கடத்திச் செல்ல முனைந்திருக்கிறார்கள்.

ஆனால் அறுமுகனோ அவர்களுடன் நெடுந்துரம் செல்ல விரும்பவில்லை. அது காரணமாக கடலிலே புயல் அடித்திருக்கிறது. கொந்தளிக்கும் கடலிலே கப்பல் ஆடி இருக்கிறது. உத்பாதம் நேர்வதை அறிந்த அந்த டச்சு வியாபாரிகள் இனியும் அறுமுகனை தங்களுடன் வைத்திருப்பது தகாது என்று அவனை அலக்காய்த்தூக்கி குமுறும் கடலிலேயே எறிந்து விடுகிறார்கள். அதன் பின்னர் அவர்கள் தலை தப்பி தங்கள் ஊர் சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

கோயிலில் இருந்த அறுமுகவன் காணாமற் போன செய்தியை, நாயக்க மன்னரின் பிரதிநிதியாக விளங்கிய வடமலையப்ப பிள்ளையன் அறிந்திருக்கிறார். மிகுந்த வருத்தமுற்றிருக்கிறார். என்ன செய்வது என்று அறியாதவராய், பஞ்சலோகத்தில் இன்னொரு அறுமுகனை வார்த்தெடுத்து நிறுத்த முனைந்திருக்கிறார். ஆனால் அவர் எண்ணம் நிறைவேறும் முன்னமேயே, ஒரு கனவு கண்டிருக்கிறார். கனவில் கடலுக்குள் இருக்கும் ஆறுமுகனே வந்து, தான் இருக்கும் இடத்தை அறிவித்திருக்கிறார். ‘கடற்கரையிலிருந்து ஆறு காத துரம் சென்றால் அங்கு ஒரு எலுமிச்சம்பழம் மிதக்கும். அந்த இடத்தைச் சுற்றி கருடன் வட்டமிட்டுக் கொண்டிருப்பான்; அங்கு முங்கி மூழ்கினால் நான் உந்தி வந்து விடுவேன்’. என்று கூறியிருக்கிறான். வடமலையப்ப பிள்ளையும் குறித்த இடம் சென்று ஆறுமுகனைக் கடலின் அடித்தலத்திலிருந்து எடுத்து வந்து கோயிலில் நிறுத்தியிருக்கிறார். அன்று முதல் அங்கு கோயில் கொண்டிருப்பவனே அந்தப் பழைய ஆறுமுகன், ஆம், வடமலையப்பன் தேடி எடுத்த தேவதேவன், இதன் ஞாபகார்த்தமாக ஒரு நல்ல மண்டபத்தையும் கட்டி முடித்திருக்கிறார் அவர். அந்த மண்டபமே இன்றும் வடமலையப்பன் மண்டபம் என்று வழங்கப்படுகிறது.

இது ஏதோ கற்பனைக் கதை அல்ல. எம்.ரென்னல் என்னும் பிரெஞ்சு அறிஞர். 1785ல் ஜெர்மனியில் பெர்லின் நகரத்தில் இருந்து வெளியிடப்பட்ட சரித்திர இந்தியா என்ற புத்தகத்தில் இந்தத்தகவலை ஒரு டச்சு மாலுமியிடம் இருந்து தான் தெரிந்து கொண்டதாக குறித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி 1648ல் நிகழந்தது என்றும் உறுதியாக உரைத்திருக்கிறார். 1648ல் கடலுக்குள் சென்ற ஆண்டவன் 1653ல் தான் வடமலையப்ப பிள்ளையின் மூலமாக வெளிவந்திருக்கிறான். ஐந்து வருஷம் கடலுக்குள் மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்து பக்தர்கள் உய்ய நல்ல தவம் பண்ணியிருக்க வேண்டும். தவத்தால் அடைந்த புதிய சக்தியோடு வெளிவந்து பக்தர்களுக்கு அருள் செய்ய திருவுளம் கொண்டிருக்க வேண்டும். பக்தர்களும் இந்தப் புனர் நிர்மாணத்தை 1953ம் வருஷத்தில் முன்னூறாவது ஆண்டு விழாவாகக் கொண்டாடி, ஆண்டவன் கருணையை நினைந்து வாழ்த்தி, மகிழ்ந்து இருக்கிறார்கள்.

இதை ஒட்டியே இன்னொரு வரலாறு. இப்படி கடலில் இருந்து எழுந்தருளிய ஆறுமுகனை அன்று முதல் வடமலையப்ப பிள்ளையன் மண்டபத்திலே எழுந்தருளச் செய்து அங்கு மண்டபப்படி நடத்துவது வழக்கமாக இருந்து வந்திருக்கின்றது. இந்த நிலையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்ம நாயக்கர் ஒரு புதிய மண்டபம் கட்டி திருவீதி, உலாப் போந்த ஆறுமுகப் பெருமானை, வடமலையப்பிள்ளையன் மண்டபத்திற்குக் கொண்டு செல்லாமல், நேரே தன் புதிய மண்டபத்திற்கே எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கிறார். பாளையக்காரரின் ஆதிக்கத்தை அறிந்த வடமலையப்ப பிள்ளையனோ, இதைத் தடுக்க முனையவில்லை என்றாலும் ஆண்டவன் அறியானா அவர் உள்ளம் துயர் உறுவதை. அவ்வளவுதான், இறைவன் திரு உலா வந்த போது காற்றும் மழையும் கலந்தடித்து அல்லோலகல்லோலப் படுத்தியிருக்கிறது. பல்லக்குத் தூக்கியவர்களோ மேலே செல்ல இயலாதவர்களாய்ப் பக்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திலேயே பல்லக்கை இறக்கி விட்டு உட்கார்ந்து விடுகிறார்கள். மழை நின்று புயல் ஓய்ந்தபின் பார்த்தால் பல்லக்குத் தங்கியிருக்கின்ற மண்டபம், பிள்ளையன் மண்டபமாக இருப்பதைக் காண்கிறார்கள். கட்டபொம்மன் தன் தவறை உணர்கிறார். பிள்ளையனிடம் மன்னிப்புக் கோருகிறார். பிள்ளையனும் ஐயன் கருணையை நினைந்து நினைந்து உருகுகிறார்.

இன்னும் ஒரு வரலாறு. ஆங்கில அன்பர்கள் சிலரையும் ஆண்டவன் பெற்றிருந்தான் என்பதற்கு பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே திருநெல்வேலியிலே கலெக்டராக இருந்தவர் லஷிங்டன் துரைமகனார் (S.R.Lushinglion). அவரை, ஆண்டவன் ஆட்கொண்டிருக்கிறான். 1803ம் வருஷம் அவர் வெள்ளிப் பாத்திரங்கள் பலவற்றை இக்கோயிலுக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார். அத்துடன் இவர் திருச்செந்துரை அடுத்த வீரபாண்டியன் பட்டினத்திலேயே ஒரு பங்களாக் கட்டிக் கொண்டு வாழ்ந்து வந்தார் என்றும் சொல்லப்படுகிறது. தமிழர் தெய்வமான முருகன் ஆங்கிலேயர்களையும் தன் அன்புக்கு ஆளாக்கி இருக்கிறான் என்று காண்கிறோம் இவ்வரலாற்றில் இருந்து.

கொங்கணர் ஆரியர் ஒட்டியர்
கோசலர் குச்சலர் ஆம்
சிங்களர் சோனகர் வங்காளர்
ஈழர் தெலுங்கர் கொங்கர்
அங்கர் கலிங்கர் கண்ணாடர்
துருக்கள் அனைவருமே
தங்கள் தங்கட்கு இறை நீ
என்பர் பேரரிச் சரவணனே

                                                   -N2R நந்தகுமார்

Saturday, 15 April 2023

சோபகிருது வருடம் சித்திரை மாதம் 01 நாள் தமிழ் புத்தாண்டு. வாழ்த்துக்கள்

மனைவியின் காதல் பெரியதா? மகளின் காதல் பெரியதா?


ஆதி நெருப்பின் கதகதப்பு காதல்! 
உலகின் முதல் உன்மத்தம் காதல்! 
வயதையும் மனதையும் போட்டு விழுங்கும் புதிர்பூதம் காதல்!
Chemistry-யின் History யாய் இருப்பது இந்தக் காதல்!

அத்தகைய காதல் கொண்டு உங்களை வரவேற்கிறேன்.

ஒரு தோழி கேட்டிருந்தாங்க...

 நண்பா, என் கணவர் எனக்குத் தர முக்கியத்துவத்தைவிட என் மகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார். அவள் மீதே அதிக அக்கறையோட இருக்கிறார். இதுவே அவர்மீது எனக்குக் கோவமாக மாறுகிறது. நீங்க சொல்லுங்க. மனைவிமீது கொண்ட காதல் பெரியதா? மகள்மீது கொண்ட அன்பு பெரியதான்னு கேட்டிருந்தாங்க.

Alfred என்ற உளவியல் நிபுணர் என்ன சொல்றார் தெரியுமா? 
 ஒவ்வொரு ஆணும் தன் மனைவியிடத்தில் ஒரு குழந்தைத்தனத்தை எதிர்பார்க்கிறான்! அது கிடைக்காத போது மனைவியின் உருவச் சாயலில் குழந்தையாகவே கிடைக்கும் மகளின்மீது அவனது அன்பு 100 மடங்காக பெருகுகிறதுன்னு சொல்றாருங்க.

எந்த ஒரு ஆண், மனைவியை அதிகம் காதலிக்கிறானோ அவனால் மட்டுமே மகளை அதிகம் நேசிக்க முடியும்னு உளவியல் நிபுணர் சொல்றாருங்க.

அதனால் தானே பாரதி செல்லம்மாவைக் காதலித்தார்... ஆனால் தன் மகள் கண்ணம்மாவைத்தானே பாடினார்.

“ஓடி வருகையிலே உள்ளம் குளிருதடி பாடித் திரிதல் கண்டால், உன்னைப் போய்
ஆவி தழுவுதடி
உச்சிதனை முகர்ந்தால் கர்வம்
ஓங்கி வளருதடி
மெச்சி உனைஊரார் புகழ்ந்தால் என் மேனி சிலிர்க்குதடி
கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளந்தான்
கள்வெறி கொள்ளுதடி உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி" னு
 பாரதி தன் மகளின் மீதான பாசத்தை
வெளிப்படுத்தியிருக்கிறாரில்ல.
   நா.முத்துகுமார் இன்னும் ஒருபடி மேலே போய் எழுதுவாருங்க

"மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு பட்டுமே தெரியும்.
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாய்,
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறான்"னு சொல்லியிருப்பாரு.

இந்த மகள்களை யார் ஒருவன் நேசிக்கிறானோ, அவன் தன் மனைவியின் மீதும் அதீத நேசிப்புடன் இருப்பாங்களாம்.

 ஒரு கூட்டுக் குடும்பம்! அப்போதான் அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகியிருக்கு. இருவரும் தனியறையில் விளையாடிட்டு இருக்காங்க. என்ன விளையாட்டுனா யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவை திறக்கக் கூடாதுனு... முதல்ல பையனோட அம்மா கதவைத் தட்டுறாங்க. அந்தப் பையன் அதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டுக் கதவைத் திறக்கவில்லை. அடுத்து பையனோட அப்பா, அதற்கடுத்து பையனோட தங்கை இப்படி ஒவ்வொருத்தரா கதவைத் தட்டுறாங்க. இவங்க கதவைத் திறக்கவே இல்லை. கொஞ்ச நேரம் கழிச்சு மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்குது.

இப்போ, அந்தப் பெண் ஜன்னல் வழியா பாக்குறா. தட்டியவர் பெண்ணோட அப்பா. 'தங்கம்... நான் தான் நிக்கிறேன். அப்பா வந்திருக்கேன். கதவைத் தெறம்மா"னு ஒரே அழைப்புதான். அந்தப் பெண்ணிற்குக் கண்ணீர் முட்டிக் கொண்டு வருவதை அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கதவைத் திறந்துப்பா... இதை எல்லாத்தையும் கண்டு அந்தப் பையன் சிரிச்சிட்டே இருந்தான்.

இரண்டு நாள் கழித்து என்ன குழந்தை வேண்டும்னு இரண்டு பேரும் மொட்டை மாடியில பேசிட்டு இருந்தாங்க. கணவன் கொஞ்சம் கூட யோசிக்காமல் சொன்னான். கண்டிப்பாய் எனக்குப் பெண் குழந்தை தான் வேணும்னு சொன்னான். ஏன்னு மனைவி கேட்டாள். கடைசி காலத்தில் மகள் தானே நமக்குக் கதவைத் திறப்பான்னு சொன்னதா அந்தக் கதை வரும்...!

மகள்களைப் பெற்ற தந்தைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! அத்தகைய தந்தைகளைக் கணவனாய் பெற்ற மனைவிகள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!

இன்னொரு முறை அவர் உங்கள் மகள் மீது கவனத்தைச் செலுத்தினாலோ, உங்கள் மகள் மீது அதிக அக்கறை செலுத்தினாலோ, உங்கள் மகள் மீது முக்கியத்துவத்தைச் செலுத்தினாலோ அவரோடு நீங்கள் அதிகம் காதலைச் செலுத்துங்கள்.

நன்றி!
மதுரை ராமகிருஷ்ணன்

Monday, 30 January 2023

பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மஹாலிங்கேஷ்வரர் கோவில், திருவிடைமருதூர்

முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் நடைபெறாது. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு போட்டுக்கொண்டு நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். ஒரு சிலருக்கு உடல்நல ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டேயிருக்கும். வேறு சிலர் வசதியின்றி, வறுமையில் கஷ்டப்பட்டு வருவர். அது மட்டுமில்லாமல் திருமணம் நடைபெறாமல் தள்ளிப்போதல், குழந்தை பேறின்மை, திருமணமான தம்பதியரிடையே பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள், துன்பங்கள் போன்றவைகள் வருவதற்கு தலைமுறை, தலைமுறையாக ஏற்படும் முன்னோர்களின் சாபங்கள் தான் காரணம் என்று நம்பப்படுகிறது. அதையடுத்து, முன்னோர்களின் சாபங்களை போக்குவதற்கான கோயில் குறித்து பார்க்கலாம்.
* பிரம்மஹத்தி தோஷம் :

• சாபங்களிலேயே மிகவும் கொடிய சாபமாக முன்னோர்களின் சாபமே பிரம்மஹத்தி தோஷமாக கருதப்படுகிறது.
• பிரம்மஹத்தி தோஷத்தை போக்கக்கூடிய கோயிலாக கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் உள்ளது.
• 1200 ஆண்டுகளுக்கும் பழமையான இந்த கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் போன்றோர்களால் பாடப்பட்டதாகும்.
• முன்பொரு சமயம் மதுரையை அரசாட்சி செய்து வந்த வரகுண பாண்டியன் என்ற மன்னன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தான்.
• அப்போது சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் கால்பட்டு இறந்து விட்டான்.
• இந்த செயல் பாண்டிய மன்னனுக்கு தெரியாமலே நடந்தது என்றாலும் மன்னனை, பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண்டது.
• பெரிய சிவபக்தனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான்.
• அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றிய சிவபெருமான், சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறினார்.

* திரும்பி வரும் போது...

• எதிரி மன்னனாக திகழும் சோழ நாட்டிற்குள், எப்படி செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது. 
• அதையடுத்து, போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.
• அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக சென்று மகாலிங்கேஸ்வரரை தரிசனம் செய்து பாண்டிய மன்னன் வழிபட்டான்.
• வரகுண பாண்டிய மன்னன் கோயிலுக்குள் நுழையும் போது, அவரை பற்றி இருந்த பிரம்மஹத்தி தோஷம் வெளியே நின்றது.
• வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்து காத்திருந்தது.
• அப்போது சிவபெருமான், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். அதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.
• அதையடுத்து, பாண்டிய மன்னன் சென்றது போலவே, இன்றும் இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.

* சிறப்பு :

• உலகளவில் மருத மரத்தை ஸ்தல விருட்சமாக கொண்டிருக்கும் 3 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். ஸ்ரீசைலம் மற்றும் திருநெல்வேலி ஆகியவை மற்ற 2 கோயில்களாகும்.
• திருவுடைமருதூர் கோயிலில் இருக்கும் 3 பிரகாரங்களை வலம் வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.

* அஸ்வமேதப் பிரகாரம் :
முதலாவதாக இருக்கின்ற இந்த வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

* கொடுமுடிப் பிரகாரம் :
இரண்டாவதாகவும், மத்தியிலும் இருக்கும் இப்பிரகாரத்தை வலம் வருவது. சிவபெருமான் குடியிருக்கும் கைலாய மலையை வலம் வருவதற்குச் சமம் என்று கூறப்படுகிறது.

* பிரணவப்பிரகாரம் :
மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும்.

7 தலைமுறை முன்னோர்களின் பாவத்தை நீக்கக்கூடிய சக்தி வாய்ந்த சிவ மந்திரம்.. 

ஓம் ஸ்ரீ சோம நாதீஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மல்லிகார்ஜுணேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ மஹா காலேஸ்வராய நமஹ 
ஓம் ஸ்ரீ ஓங்காரம் மல்லேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ வைத்திய பீம சங்கரேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ இராமேஸ்வராய நமஹ
ஓம் ஸ்ரீ கேதாரீஸ்வராய நமஹ

ஓம் நம சிவாய...
இந்த கோவில் மயிலாடுதுறை இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் உள்ளது.

Wednesday, 22 June 2022

கமலை / கவலையோட்டுதல் / ஏற்றம்

கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்,
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடம் சூட்டுவதும்,
தலையிட்ட பொருள்நான்கும் தலைநீட்டப் படுவதுவும்,
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே.
           -ஏரெழுபது (துலையிட்ட நீரீன் சிறப்பு -40), கம்பர்.

விளக்கம்
கலையனைத்தும் கற்றறிந்த வேதம் ஓதும் அந்தணர்கள் அக்னி வளர்த்து யாகம் புரிவதும்;
மலை போன்ற வலிமையுடைய அரசர்கள் மணிமகுடம் சூடிக்கொள்வதும்;
சிறப்பு பொருந்திய வணிகர்கள் வாழ்வதற்காகப் பொருள் ஈட்டுவதும்; என
அனைவரும் நிலைபெற்று விளங்கும் விவசாயத் தொழில் புரியும் விவசாயிகளின் ஏற்றத்தைத் துணையாகக் கொண்டு பாய்ச்சிய நீரினால் மட்டுமே ஆகும்.

கமலை/கவலை


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)


  கமலை என்பது ஒரு கிணற்றிலிருந்து நீரிறைக்கும் சாதனமாகும். இதைக் கொண்டு ஒரு காலத்தில் வேளாண்மை நடந்துவந்தது.

  நன்செய்ப் பாசனத்திற்கு, ஆற்றுநீர் இல்லாவிடங்கட்குக் கண்ணாறுகளும் கால்வாய்களும் வெட்டிப் பாய்ச்சினர். அது இயலாவிடத்து ஏரிகளை வெட்டினர். ஏர்த்தொழிற்கு உதவுவது ஏரி. குளிப்பது குளம். இன்று ஏரியைத் தவறாகக் குளமென்பர் ஒரு சாரார். இயற்கையாக உண்டான ஏரி அல்லது குளம் பொய்கை எனப்படும். முல்லைநிலத்திற் புன்செய்ப் பாசனத்திற்குக் கிணறு களை வெட்டினர்.


புகைப்படம் 1920 ல் மெட்ராஸ்ல் வெளியிடப்பட்ட அஞ்சல் அட்டை (post card)

   எருதுகளைக் கொண்டு கிணற்றுநீரை இறைக்கும் ஏற்றம் கம்மாலை எனப்பட்டது. அம் = நீர், அம் - கம் = நீர். கம் + ஆலை = கம்மாலை. ஆலை சுற்றி வருவது. கம்மாலையென்பது இன்று கமலை என்றும் கவலை என்றும் திரிந்து வழங்குகின்றது.  இன்று எருதுகள் நேராகச் செல்வதால் கவலையோட்டுதல் என்றும் கூறுவர்.

எருது


  விதைக்கென்று முதற் காய்ப்பையும் சிறந்த மணிகளையும் ஒதுக்கி வைத்தனர். அக்காலத்து உழவர் பொருளீட்டலைக் குறிக் கொள்ளாது, உணவு விளைத்தலையே குறிக்கொண்டு பதினெண் கூலங்களையும் அவற்றின் வகைகளையும், ஆண்டுதோறும் விளைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான நெல்வகைகள் விளைக்கப் பெற்றன. அவற்றுட் பெரும்பாலனவற்றை இன்று கண்ணாலும் காண முடியவில்லை; காதாலும் கேட்க முடியவில்லை. பொன் தினை, செந்தினை, கருந்தினை என்னும் மூவகையுள், இன்று பொன்றினையே காண முடிகின்றது. அவரை வகைகளுட் பல ஆண்டு தோறும் ஒவ்வொன்றாய் மறைந்து வருகின்றன. இன்று ஆட்சியை நடத்துபவருக்குப் பதவியைக் காக்க வேண்டு மென்பதேயன்றி, விதை வகைகளைப் பேணவேண்டு மென்னும் கலை நோக்கில்லை. 


   தமிழகத்தில் உழவுத்தொழிற்கு இன்றியமையாத் துணையாக, தொன்றுதொட்டுப் பயன்பட்டுவரும் விலங்கு எருதாகும், ஏர்த் தொழிற்கு உதவுவதனால் காளை எருதெனப் பட்டது. ஏர் - ஏர்து-எருது. காட்டுமாட்டைப் பிடித்துப் பழக்கி வீட்டு விலங்காக்கி ஏர்த்தொழிற்குப் பயன்படுத்தினர். 


   எருதின் இன்றியமையாமை நோக்கியே ஏர்த் தொழிலைப் பகடு என்றனர். 

"பகடு புறந்தருநர் பாரம் ஒம்பி" (புறம். 35) 

"பகடு நடந்த கூழ்" (நாலடி. 4)


உழவுத்தொழிலும் பாண்டியம் எனப்பட்டது.

"பாண்டியஞ் செய்வான் பொருளினும்" (கலித்.136) 

பாண்டி எருது.

   எருதுகளை நிறம் பற்றியும் திறம்பற்றியும் பலவகையாக வகுத்து, அவற்றுள் நால்வகையைச் சிறப்பாக இறக்க வரிசையில் எடுத்துக் கூறினர். அது "முழுப் புல்லை, முக்கால் மயிலை, அரைச் சிவப்பு. கால் கருப்பு;" எனப் பழமொழியாய் வழங்கி வருகின்றது. 

சால் பறி



  இது இரண்டு வகைப்படும் படத்தில் உள்ளது இரும்பு பறி, இன்னொரு வகை தோலினால் ஆன பறி இதில் இரும்பு பறி அதிக நாளைக்கு உழைக்கும் தண்ணீர் அதிகம் பிடிக்கும் தோல் பறி ஆனது குறுகிய நாளில் சேதாரம் ஆகி கிழிந்து விடும் தண்ணீர் குறைவாக தான் பிடிக்கும்

  இரும்பு பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் பெரியதாக இருக்கும் தோல் பறி வைத்திருக்கும் விவசாயிகள் எருதுகள் சிறியதாக இருந்தாலே போதும்.


கமலை/கவலை செயல்படும் விதம்


  தண்ணீர் இறைக்க “கவலை”, (சில ஊர்களில் கமலை,ஏற்றம்,ஏத்து என்பார்கள்) உபயோகப்படுத்துவார்கள். ஒரு கிணற்றுக்கு ஒன்று முதல் இரண்டு கவலைகள் இருக்கும். சாதாரணமாக ஒரு கவலைகள்தான் பெரும்பாலான கிணறுகளில் இருக்கும். தண்ணீர் வசதி அதிகம் இருந்தால் நான்கு கவலைகள் கூட இருக்கும்

  ஒவ்வொன்றுக்கும் இரண்டு எருதுகள், ஒரு ஆள். இரும்பு பறி அல்லது தோலினால் ஆன “பறி” என்று அழைக்கப்படும் ஒரு விதமான பெரிய பையை, வடக்கயிறு என்று சொல்லப்படும் ஒரு பெரிய கயிறு கட்டி ஏற்று உருளை மூலம் முன்னும் பின்னுமாக எருதுகளை ஓட்டி தண்ணீர் இறைப்பார்கள். ( கிணற்றில் வாளி மூலமாக தண்ணீர் சேந்துகிற மாதிரி)

  அந்தப்பறிக்கு ஒரு வால் இருக்கும். அதை வால் கயிறு எனப்படும் ஒரு சிறிய கயிற்றால் கட்டியிருப்பார்கள்.இதுவும் நிலத்து மட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் சிறிய உருளை மூலம் சிறிய வடக்கயிறும் வால்க்கயிறும் எருதுகளின் நுகத்தடியில் கட்டியிருப்பார்கள். பறி கிணற்றுக்கு மேல் வந்தவுடன் அந்த வால் வழியாக நீர் வாய்க்காலில் விழுவதற்குத் தோதாக வால் கயிற்றை இழுப்பார்கள். தண்ணீர் வால் வழியாக வாய்க்காலில் விழும்.

  அந்த கவலை மூலம் நீர் இறைப்பதே, பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையாக இருக்கும். இதில் மனித உழைப்பிலும் மாட்டின் உழைப்பிலுமே கிணற்று நீர் வெளியே வந்து சேர்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

  ஒரு நாள் முழுவதும் கவலை இறைத்தால் அரை ஏக்கர் நிலம் நீர் பாய்ச்சலாம். பயிர்களுக்கு எப்படியும் எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். ஆக மொத்தம் ஒரு கிணறும் இரண்டு கவலைகளும் இருந்தால் தண்ணீர் வசதி அதிகம் இருக்கும் காலங்களில் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் பாசன விவசாயம் செய்யலாம்.

  ஆனால் இரண்டு எருதுகளும் திறமைசாலியாக இருக்கவேண்டும்

  அப்பொழுது எல்லாம் சிறு தானிய பயிர்களை மட்டுமே சாகுபடி செய்தார்கள் அதுவும் குறுகிய நாளில் வரக்கூடிய கேழ்வரகு, கம்பு, சோளம்,மிளகாய் போன்ற வகைகள்தான் அதிகம் நெல் நடவு செய்யமுடியாது இதற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் தேவையான தண்ணீரை பாய்ச்சமுடியாது.

கமலையின் மகத்துவம்

  நீரில் மூன்று அடுக்குகள் உள்ளன. முதலாவது மேல்மட்ட நீர் (surface water), இரண்டாவது தந்துகிக் குழாய் நீர் (capillary water), மூன்றாவது நிலத்தடி நீர் (ground water).

  பொதுவாக மேல்மட்ட நீரானது குளங்களிலும் ஆறுகளிலும் காணப்படும். நிலத்தடி நீர் என்பது 100 அடிக்கும் கீழே தண்ணீர் தாவளங்களாக (aquifers) காணப்படும். இதற்கிடையில் உள்ள நீர், நுண்துளை நீர் என்று அழைக்கப்படும். இது ஆண்டுதோறும் பெய்யும் மழை, குளங்களில் சேமிக்கப்படும் நீரின் அளவு, காணப்படும் மரங்களின் அடர்த்தி ஆகியவற்றைக்கொண்டு உருவாகும்.

  பொதுவாகக் கமலைக் கிணறுகள் யாவும் இந்த நுண்துளை நீரை மட்டுமே பயன்படுத்துபவை. கமலையின் இறைப்பு அளவும், கிணற்றின் நீர் ஊறும் திறனும் பெரும்பாலும் சமமாக இருக்கும். ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு, அடுத்த சால் இறைக்கப் போகும்முன் நீர் ஊறிவிடும். இதைத்தான் நீடித்ததன்மை (sustainability) என்று இப்போது பொருளியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

மின் எக்கி

  வங்கிகள் மின்எக்கிகளை (electric motor) அமைத்துக்கொள்ளக் கடன் வழங்கின. கடன் பெறத் 'தகுதி' பெற்றோர் கடன் வாங்கி 'மோட்டார்களை' அமைத்துக்கொண்டனர். ஒரு சிற்றூரில் 100-க்கு 80 பேர் கமலை வைத்திருந்தார்கள் என்றால், அதில் 20 பேருக்கு மட்டும் கடன் கிடைத்தது. அதாவது, 80 உழவர்களில் 20 பேர் மின்எக்கிகளுக்கு மாறினர்.

  மின்சார எக்கிகள் நீரை மிக வேகமாக உறிஞ்சின. கிணற்றின் ஊறும் வேகம் மின்சார எக்கிகளுக்கு முன் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எனவே, கிணறுகளில் நீர் மட்டம் அதி வேகமாகக் கீழிறங்கியது. இதனால் மீதமுள்ளவர்களும் மின்சார எக்கிகளுக்கு மாற வேண்டும் அல்லது சாகுபடியைக் கைவிட வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால் கமலைகள் காணாமல் போயின. படிப்படியாக ஏற்றம் மூலம் தண்ணீர் பாய்ச்சு வதை நிறுத்தியதால் தற்போதுள்ள இளைஞர்களுக்கோ, காளை களுக்கோ ஏற்றம் மூலம் தண்ணீர் இறைக்கத் தெரியாமல் போய் விட்டது.

                                                                                         எழுத்து,                                                                                                          N2R நந்தகுமார்

Tuesday, 3 May 2022

ரமலான் பெருவிழா நல்வாழ்த்துக்கள் Ramzan Wishes

“அன்னம் ஆகாரம் இல்லாமல் ஒரு வேளை மட்டும் உணவருந்தி ரமலான் மாதம் முழுவதும் இறைவனை எண்ணி தன் உடலை வருத்தி நோன்பிருந்து இறைவனுக்கு தொழுகையால் தனது அன்பை பரிமாறும் இஸ்லாமிய நல்ல உள்ளங்களுக்கு எங்களது இனிய ரமலான் திருநாள் வாழ்த்துகள்...!”


N2R 

Tuesday, 19 April 2022

கிரகப்பிரவேச காலத்தில் பசுவை உள்ளே அழைப்பது ஏதற்காக?


கோமாதா என்று போற்றப்படும் கன்றுடன் கூடிய பசுவை முதன் முதலில் உள்ளே அழைப்பது எல்லோரது வீடுகளிலும் நடப்பது. இது தரைத்தள வீடுகளில் மட்டும் சாத்தியமாகிறது.


மாடி வீடுகளில் வசிப்பவர்கள் பசுவின் பொம்மை, காமாட்சி தீபம், மட்டைத் தேங்காயை வைத்து கோபூஜை செய்து விடலாம்.

வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழுங்க அழைத்து வருகிறார்கள்.

பசு கன்றுடன் வீட்டு உள்ளே வரும் போது….

“ஓம் சர்வ காமதுகே தேவி சர்வ தீர்த்தாபிஷேசி நீ
பாவநீ சுரபி ஸ்ரேஷ்ட தேவி துப்யம் நமோஸ்துதே”!

என்று வணங்கி கூற வேண்டும்.


ஏ! கோ மாதாவே சகல தெய்வங்களையும் தீர்த்தங்களையும் உடலுள் வைத்துக் கொண்டு லட்சுமி அருளையும், சகல ஐஸ்வர்யங்களையும் பேர் அருளாய்ச் சுரக்கும் உன்னை அன்னையாகத் துதிக்கிறேன் என்று வரவேற்க வேண்டும். இதனால் வீட்டில் அனைத்து தெய்வ தேவ வாழ்த்துக்களும் கிடைக்கும்.

N2R NandhakumaR

Friday, 24 December 2021

ஒருவனுக்கு ஒருத்தி! ஒருத்திக்கு ஒருவன்!!


திருமணத்திற்கு பிறகு
வேலை வேண்டாம் என்றார் 
விட்டுவிட்டேன்!

நம்பரை மாற்ற வேண்டும் என்றார்
மாற்றிவிட்டேன்!

Facebook கூடாதென்றார்
நிறுத்தி விட்டேன்!

ஆண் நண்பர்கள் நட்பை
தொடரவேண்டாம் என்றார்
விட்டுவிட்டேன்!

லெக்கின் அணிந்தால்
கால் அளவு தெரியுமென்றார்
சுடிதாருக்கு மாறிக்கொண்டேன்!

Heels வைத்த செருப்பு
கூடாதென்றார்,
தூர ஒதுக்கினேன்!

ஜாக்கெட்டுக்கு தனியாய்
ஜன்னல் வேண்டாம் என்றார்
கழுத்துவரை மறைத்து 
தைத்துக்கொண்டேன்!

உதட்டு சாயம் கூடாதென்றார்
ஒன்றும் போடாமல் 
விட்டுவிட்டேன்!

பார்லர் பக்கம் வேண்டாம் என்றார்,
பாலாடை தயிரோடு 
நிறுத்திக்கொண்டேன்!

கொஞ்ச நாள் சந்தோஷமாய்
இருந்து அதன்பின் குழந்தை பற்றி
யோசிக்கலாம் என்றார்,
அதுவரை தவறாமல் மாதந்தோறும் 
மாத்திரை தின்றேன்!

வாரத்தின் ஏழுநாளும் 
அவருக்கு பிடித்ததே 
சமைக்க வேண்டும்!

வாரக்கடைசியில் நண்பர்கள்
என்று நடுராத்திரி தான்
திரும்புவார்!

இரவு ஒரு மணிக்கு
 Reached ? என்று 
பெண் பெயரில் மெசேஜ்!

பொழுது விடிந்ததும் 
யாரென்று கேட்டேன்,
Ex lover என்றார்!

விட்டுவிடச் சொன்னேன்,

முடியவில்லை என்றார்!

முயன்றால் முடியும்
துணைக்கு நானிருக்கிறேன்
என்றேன்!

நீயும் அவளும் ஒன்றா என்றார்,

வேறு வேறு தான்,
இது legal அது illegal என்றேன்!

அறைந்துவிட்டார்!

தூக்கம் போனது!

உங்களுக்காக எல்லாவற்றையும்
விட்டுவிட்டேன்,
எனக்காக இது ஒன்றை மட்டும்
விட்டுவிடுங்கள் என்றேன்!

முடியாது it's true love 
என்றார்!

எனக்கும் கூட true love
இருந்தது என்றேன்!

மறைத்ததற்காக ஒரு வாரம்
அடித்தார்!

தாங்கிக்கொண்டேன்!

ஆனால் அவரிடம் எந்த மாற்றமும்
இல்லை!

திரும்பவும் Facebook 
open செய்தேன்!

திரும்பவும் lipstick போட்டேன்!

திரும்பவும் ஜாக்கெட்டுக்கு
ஜன்னல் வைத்தேன்!

திரும்பவும் லெக்கின் போட்டேன்!

பார்லர் பக்கம் 
தலைவைத்து படுத்தேன்!

எனக்கு பிடித்ததையும்
சமைத்தேன்!

முகநூல் முழுவதும் 
காதல் கவிதைகளாய்
எழுதினேன்!

திரும்பவும் வேலைக்கு போனேன்,
திரும்பும் போது லேட்டாக
வந்தேன்!

ஆண் நட்புக்களை புதுப்பித்தேன்,
அவ்வப்போது weekend party என்று
வெளியே சென்றேன்!

ஒளிந்து ஒளிந்து போன் பேசினேன்,
மொபைலுக்கும் laptop க்கும்
Password போட்டேன்!

அவருக்கு இருந்த ஆயிரம்
வேலைகளில் முக்கியமான வேலை
என்னை வேவு பார்ப்பது!

தன் வீட்டு சாப்பாடு
தனக்கு மட்டுமே சொந்தம் என்று
திருடு போகாமல் காப்பாற்ற
லீவு நாட்களில் கூட அவர்
வெளியே போவதில்லை!

எப்படியாவது என் ex lover ஐ
கையும் களவுமாக பிடிக்கவேண்டும்
என்று என்னைச்சுற்றியே
வட்டமிடுகிறார்!

எந்த ஜென்மத்திலும் அவரால்
கண்டுபிடிக்க முடியாது,
காரணம் எந்த ex lover ம்
எனக்கு கிடையாது!

இல்லாத ஒருவனை தேடித்தேடியே
என் அருகாமையில் சுற்றுவார்,
அவளை விட்டு தூரம் வருவார்!

அவளை மறந்து என்னை
மட்டுமே நினைக்கும் வரை
எனக்கு ex lover வேண்டும்!
நீ யாரென்றே தெரியாது 
என் அன்பு காதலனே...

கலாசாரம் இல்ல வாழ்வு அற்ப வாழ்வு!
கலாசார வாழ்வு காலத்தை வென்ற வாழ்வு!!

Thursday, 14 October 2021

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடும் முறை


   நவராத்திரி விழா கடந்த வாரம் துவங்கி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்தியில் நாம் பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் போன்றவற்றை வாழை இலையில் வைத்துப் படைக்க வேண்டும். அத்துடன் அம்மனுக்கு மலர்கள், பழங்கள், தானிங்கள், பிரசாதங்கள் ஆகியவற்றை ஓன்பது நாளும் படைக்க வேண்டும்.

Published by
Channel N2R

   நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் லட்சுமி உரியவை. அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கு உகந்தவை. கடைசி மூன்று நாட்களும் சரஸ்வதியின் நாட்கள் உகந்தவை. இன்று சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்விக்கடவுளான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும் மற்றும் தொழில், வர்த்தகம் நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் நடத்தப்படுகிறது.

சரஸ்வதி பூஜை கொண்டாடும் முறை
  வ‌ழிபாடு செ‌ய்வத‌ற்கு மு‌ன்பு, வ‌ழிபடு‌ம் இட‌த்தை தூ‌ய்மை‌ப்படு‌த்தி ச‌ந்தன‌ம் தெ‌ளி‌த்து, கு‌ங்கும‌ம் இட வே‌ண்டு‌ம். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து பூஜையில் வைத்து விநாயகரை வணங்கிய பின்னரே சரஸ்வதிக்கான பூஜையை ஆரம்பித்தல் வேண்டும். சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தி‌ற்கு‌ படை‌க்க‌ப்பட பொரு‌ட்களு‌க்கு‌ம் ச‌ந்தன‌ம் கு‌ங்கும‌ம் இட வேண்டும். 

  சர‌ஸ்வ‌தி‌யி‌ன் பட‌த்‌தை பூ‌க்க‌ளால் அல‌ங்க‌ரி‌க்க வே‌ண்டு‌ம். சரஸ்வதி படத்தின் கீழ் வாழை இலை விரித்து அதில் படையலுக்காக சமைக்கப் பட்டவைகளை வைக்க வேண்டும். சரஸ்வதி படத்தின் அருகில் புத்தகங்களை வைக்க வேண்டும். படையலுக்காக பழங்கள், பொறி, நாட்டு சர்க்கரை, கடலை, அவல் இவை அனைத்தும் வாழையிலையில் வைக்க வேண்டும். பின்னர் கலசம் வைத்து அதில் தேவியை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜித்து வழிபட நலன் உன்டாகும். கலைவாணியை பூஜித்து வணங்கினால் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆயுத பூஜை கொண்டாடும் முறை
  ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

 N2R நந்தகுமார்
Channel N2R

Tuesday, 12 October 2021

சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது. இது பற்றி யாருக்காவது தெரியுமா? Cycling license required. Does anyone know about this?


1960 ஆம் ஆண்டுகளில் சைக்கிள் வைத்திருப்பது ஆடம்பரமாக கருதப்பட்டது, அப்போது சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது.

In the 1960s, owning a bicycle was considered a luxury, and cycling licenses were required.

1960 കളിൽ, സൈക്കിൾ സ്വന്തമാക്കുന്നത് ഒരു ആഡംബരമായി കണക്കാക്കപ്പെട്ടിരുന്നു, സൈക്കിൾ ലൈസൻസുകൾ ആവശ്യമാണ്.

Saturday, 15 May 2021

இந்த உலகில் கொரானோ தொற்று ஏற்படாமல் உங்களை காப்பாற்ற ஒரே ஒருவரால் மட்டுமே முடியும்!



அது நீங்கள் தான்

நீங்கள் தான் உங்களின் பாதுகாவலர்!
நீங்கள் தான் உங்களின் மருத்துவர்!
நீங்கள் தான் உங்களின் துப்புரவாளர்!
நீங்கள் தான் உங்கள் உடலை தாக்கவந்த கொரானோ எனும் அசுரனை வேட்டையாடும் கடவுள்!

*அது நீங்கள் தான்!*
*நீங்கள் மட்டும் தான்!!*

ஆரோக்கியமான வாழ்விற்கு விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.


மக்களின் செல்வன்
N2R நந்தகுமார்

Wednesday, 23 December 2020

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள்



_1.திருவள்ளூர் மாவட்டம்_
    🏛கும்மிடிப்பூண்டி
    🏛பொன்னேரி
    🏛திருத்தணி
    🏛திருவள்ளூர்
    🏛பூந்தமல்லி
    🏛ஆவடி

_2.சென்னை மாநகரம்_
    🏛மதுரவாயல்
    🏛அம்பத்தூர்
    🏛மாதவரம்
    🏛திருவொற்றியூர்
    🏛ராதாகிருஷ்ணன் நகர்
    🏛பெரம்பூர்
    🏛கொளத்தூர்
    🏛வில்லிவாக்கம்
    🏛திரு. வி. க நகர்
    🏛எழும்பூர்
    🏛ராயபுரம்
    🏛துறைமுகம்
    🏛சேப்பாக்கம்
    🏛ஆயிரம் விளக்கு
    🏛அண்ணா நகர்
    🏛விருகம்பாக்கம்
    🏛சைதாப்பேட்டை
    🏛தி நகர்
    🏛மயிலாப்பூர்
    🏛வேளச்சேரி
    🏛ஆலந்தூர்

_3.செங்கல்பட்டு மாவட்டம்_
    🏛சோழிங்கநல்லூர்
    🏛பல்லாவரம்
    🏛தாம்பரம்
    🏛செங்கல்பட்டு
    🏛திருப்போரூர்
    🏛செய்யூர்
    🏛மதுராந்தகம்

_4.காஞ்சிபுரம் மாவட்டம்_
    🏛திருப்பெரும்புதூர்
    🏛உத்திரமேரூர்
    🏛காஞ்சிபுரம்

_5.ராணிப்பேட்டை மாவட்டம்_
    🏛அரக்கோணம்
    🏛சோளிங்கர்
    🏛ராணிப்பேட்டை
    🏛ஆற்காடு

_6.வேலூர் மாவட்டம்_
    🏛காட்பாடி
    🏛வேலூர்
    🏛அணைக்கட்டு
    🏛கீழ்வைத்தியணான்குப்பம்
    🏛குடியாத்தம்

_7.திருப்பத்தூர் மாவட்டம்_
    🏛வாணியம்பாடி
    🏛ஆம்பூர்
    🏛ஜோலார்பேட்டை
    🏛திருப்பத்தூர்

_8.கிருஷ்ணகிரி மாவட்டம்_
    🏛ஊத்தங்கரை
    🏛பர்கூர்
    🏛கிருஷ்ணகிரி
    🏛வேப்பனஹள்ளி
    🏛ஓசூர்
    🏛தளி

_9.தர்மபுரி மாவட்டம்_
    🏛பாலக்கோடு
    🏛பென்னாகரம்
    🏛தர்மபுரி
    🏛பாப்பிரெட்டிப்பட்டி
    🏛அரூர்

_10.திருவண்ணாமலை மாவட்டம்_
    🏛செங்கம்
    🏛திருவண்ணாமலை
    🏛கீழ்பென்னாத்தூர்
    🏛கலசபாக்கம்
    🏛போளூர்
    🏛ஆரணி
    🏛செய்யாறு
    🏛வந்தவாசி

_11.விழுப்புரம் மாவட்டம்_
    🏛செஞ்சி
    🏛மயிலம்
    🏛திண்டிவனம்
    🏛வானூர்
    🏛விழுப்புரம்
    🏛விக்கிரவாண்டி

_12.கள்ளக்குறிச்சி மாவட்டம்_
    🏛திருக்கோயிலூர்
    🏛உளுந்தூர்பேட்டை
    🏛ரிஷிவந்தியம்
    🏛சங்கராபுரம்
    🏛கள்ளக்குறிச்சி

_13.சேலம் மாவட்டம்_
    🏛கங்கவள்ளி
    🏛ஆத்தூர்
    🏛ஏற்காடு
    🏛ஓமலூர்
    🏛மேட்டூர்
    🏛எடப்பாடி
    🏛சங்ககிரி
    🏛மேற்கு சேலம்
    🏛வடக்கு சேலம்
    🏛தெற்கு சேலம்
    🏛வீரபாண்டி

_14.நாமக்கல் மாவட்டம்_
    🏛ராசிபுரம்
    🏛சேந்தமங்கலம்
    🏛நாமக்கல்
    🏛பரமத்தி வேலூர்
    🏛திருச்செங்கோடு
    🏛குமாரபாளையம்

_15.ஈரோடு மாவட்டம்_
    🏛கிழக்கு ஈரோடு
    🏛மேற்கு ஈரோடு
    🏛மொடக்குறிச்சி
    🏛பெருந்துறை
    🏛பவானி
    🏛அந்தியூர்
    🏛கோபிசெட்டிபாளையம்
    🏛பவானிசாகர்

_16.திருப்பூர் மாவட்டம்_
    🏛தாராபுரம்
    🏛காங்கேயம்
    🏛அவிநாசி
    🏛வடக்கு திருப்பூர்
    🏛தெற்கு திருப்பூர்
    🏛பல்லடம்
    🏛உடுமலைப்பேட்டை
    🏛மடத்துக்குளம்

_17.நீலகிரி மாவட்டம்_
    🏛உதகமண்டலம்
    🏛கூடலூர்
    🏛குன்னூர்

_18.கோயம்புத்தூர் மாவட்டம்_
    🏛மேட்டுப்பாளையம்
    🏛சூலூர்
    🏛கவுண்டம்பாளையம்
    🏛வடக்கு கோயம்புத்தூர்
    🏛தொண்டாமுத்தூர்
    🏛தெற்கு கோயம்புத்தூர்
    🏛சிங்காநல்லூர்
    🏛கிணத்துக்கடவு
    🏛பொள்ளாச்சி
    🏛வால்பாறை

_19.திண்டுக்கல் மாவட்டம்_
    🏛பழநி
    🏛ஒட்டன்சத்திரம்
    🏛ஆத்தூர்
    🏛நிலக்கோட்டை
    🏛நத்தம்
    🏛திண்டுக்கல்
    🏛வேடசந்தூர்

_20.கரூர் மாவட்டம்_
    🏛அரவக்குறிச்சி
    🏛கரூர்
    🏛கிருஷ்ணராயபுரம்
    🏛குளித்தலை

_21.திருச்சிராப்பள்ளி மாவட்டம்_
    🏛மணப்பாறை
    🏛ஸ்ரீரங்கம்
    🏛மேற்கு திருச்சி
    🏛கிழக்கு திருச்சி
    🏛திருவெறும்பூர்
    🏛லால்குடி
    🏛மண்ணச்சநல்லூர்
    🏛முசிறி
    🏛துறையூர்

_22.பெரம்பலூர் மாவட்டம்_
    🏛பெரம்பலூர்
    🏛குன்னம்

_23.அரியலூர் மாவட்டம்_
    🏛அரியலூர்
    🏛ஜெயங்கொண்டம்

_24.கடலூர் மாவட்டம்_
    🏛திட்டக்குடி
    🏛விருத்தாசலம்
    🏛நெய்வேலி
    🏛பண்ருட்டி
    🏛கடலூர்
    🏛குறிஞ்சிப்பாடி
    🏛புவனகிரி
    🏛சிதம்பரம்
    🏛காட்டுமன்னார்கோயில்
    
_25.நாகப்பட்டினம் மாவட்டம்_
    🏛சீர்காழி
    🏛மயிலாடுதுறை
    🏛பூம்புகார்
    🏛நாகப்பட்டினம்
    🏛கீழ்வேளூர்
    🏛வேதாரண்யம்
    
_26.திருவாரூர் மாவட்டம்_
    🏛திருத்துறைப்பூண்டி
    🏛மன்னார்குடி
    🏛திருவாரூர்
    🏛நன்னிலம்
    
_27.தஞ்சாவூர் மாவட்டம்_
    🏛திருவிடைமருதூர்
    🏛கும்பகோணம்
    🏛பாபநாசம்
    🏛திருவையாறு
    🏛தஞ்சாவூர்
    🏛ஒரத்தநாடு
    🏛பட்டுக்கோட்டை
    🏛பேராவூரணி

_28.புதுக்கோட்டை மாவட்டம்_
    🏛கந்தர்வகோட்டை
    🏛விராலிமலை
    🏛புதுக்கோட்டை
    🏛திருமயம்
    🏛ஆலங்குடி
    🏛அறந்தாங்கி

_29.சிவகங்கை மாவட்டம்_
    🏛காரைக்குடி
    🏛திருப்பத்தூர்
    🏛சிவகங்கை
    🏛மானாமதுரை

_30.மதுரை மாவட்டம்_
    🏛மேலூர்
    🏛கிழக்கு மதுரை
    🏛சோழவந்தான்
    🏛வடக்கு மதுரை
    🏛தெற்கு மதுரை
    🏛மத்திய மதுரை
    🏛மேற்கு மதுரை
    🏛திருப்பரங்குன்றம்
    🏛திருமங்கலம்
    🏛உசிலம்பட்டி
    
_31.தேனி மாவட்டம்_
    🏛ஆண்டிபட்டி
    🏛பெரியகுளம்
    🏛போடிநாயக்கனூர்
    🏛கம்பம்

_32.விருதுநகர் மாவட்டம்_
    🏛ராஜபாளையம்
    🏛திருவில்லிபுத்தூர்
    🏛சாத்தூர்
    🏛சிவகாசி
    🏛விருதுநகர்
    🏛அருப்புக்கோட்டை
    🏛திருச்சுழி

_33.ராமநாதபுரம் மாவட்டம்_
    🏛பரமக்குடி
    🏛திருவாடானை
    🏛ராமநாதபுரம்
    🏛முதுகுளத்தூர்

_34.தூத்துக்குடி மாவட்டம்_
    🏛விளாத்திகுளம்
    🏛தூத்துக்குடி
    🏛திருச்செந்தூர்
    🏛ஸ்ரீவைகுண்டம்
    🏛ஒட்டப்பிடாரம்
    🏛கோவில்பட்டி

_35.தென்காசி மாவட்டம்_
    🏛சங்கரன்கோவில்
    🏛வாசுதேவநல்லூர்
    🏛கடையநல்லூர்
    🏛தென்காசி
    🏛ஆலங்குளம்

_36.திருநெல்வேலி மாவட்டம்_
    🏛திருநெல்வேலி
    🏛அம்பாசமுத்திரம்
    🏛பாளையங்கோட்டை
    🏛நாங்குநேரி
    🏛ராதாபுரம்

_37.கன்னியாகுமரி மாவட்டம்_
    🏛கன்னியாகுமரி
    🏛நாகர்கோவில்
    🏛குளச்சல்
    🏛பத்மநாபபுரம்
    🏛விளவங்கோடு
    🏛கிள்ளியூர்

Channel N2R 

Friday, 11 December 2020

ஏழை மக்களின் பசியாற்றிய மக்கள் சேவகர் சுப்பிரமணியம் சாந்தியடைந்தார்! சாந்தி கியர்ஸ் அறங்காவலர் மரணம்!!


கோவை : பல்வேறு விதங்களில் மக்களுக்கு சேவை செய்து வந்த கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (வயது 78) இன்று உயிரிழந்தார்.

இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தவர் சுப்ரமணியம்.

கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார்.
இந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.

சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.

மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

சாந்தி மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் வெறும் ரூ.30 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மருத்தகங்களிலும் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும்,மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில், புதிய ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும்.

சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சேவைகளை செய்து வந்த சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...