Thursday 27 September 2018

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை


------------------------------------------------------------------------------------
ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேச ராசியின் குணாதிசயங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்திருக்கும்.இது போல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது
-
மேசம்
மேச ராசியின் உருவம் ஆடு ஆகும்.எனவே ஆடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் மேச ராசியின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். ஆட்டு மந்தையைக்கவனியுங்கள்,அங்கே குறைந்தது இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலேயே மேச ராசிக்காரர்களை கலகக்காரர்கள் எனக்குறிப்பிடுகிறார்கள். ஆட்டுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது,அவை நஞ்சிலும் நான்கு வாய் தின்னும். இதனால்தான் மேச ராசிக்காரர்களை தைரியசாலிகள் என்று கூறுகிறார்கள். ஆடுகள் ஒரு மரத்தின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ எளிதில் ஏறிவிடும்,ஆனால் இறங்கத்தெரியாது,இதனால் மேச ராசிக்காரர்களை விவேகமில்லாதவர்கள் என குறிப்பிடுகிறார்கள். ஆடுகளுக்கு இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் ஆட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் மேச ராசிக்காரர்களுக்கு காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது
-.
ரிசபம்
ரிசப ராசியின் உருவம் மாடு ஆகும். மாடுகளை கடினமான வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம், அதாவது நமக்கு பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.இதனால் ரிசப ராசியினர் பிறருக்கு கீழ்படிந்து நடப்பர் என்றும்,நல்ல உழைப்பாளிகள் எனக்கூறப்படுகிறது. மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பழக்கிவிட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ளாது,உதாரணத்திற்கு செக்கு மாடுகளைக்கூரலாம். இதனால் ரிசப ராசியினர் மாற்றங்களை விரும்பாதவர் எனப்படுகிறார்கள். மாடுகளுக்கும் இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் ரிசப ராசிக்காரர்களுக்கும் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது
-.
மிதுனம்
மிதுன ராசியின் உருவம் இரட்டையர் ஆகும்.அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது போன்ற உருவ அமைப்பாகும். அதாவது சக மனிதர்களோடு சேர்ந்திருப்பதை பெரிதும் விரும்புபவர்கள் மிதுன ராசியினர். மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் நட்பு விரும்பிகள்,தனிமையில் அவர்களால் இருக்க முடியாது. எப்பொழுதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் நல்ல தூதுவர்களாக செயல்படுவார்கள். மனிதர்களை பெரிதும் நேசிப்பார்கள். எதிர்பாலார் மீது இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். காதல் உணர்வு அதிக மாக இருக்கும்
-
கடகம்
கடக ராசியின் உருவம் நண்டு ஆகும். நண்டு தாய்மையின் அடையாளமாகும். அதாவது நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சிகளை சுமந்து திரிவதில் அலாதி பிரியமுடையவை.இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம்கொண்டவர்கள் என்றும்,தன் குடும்பத்தை கட்டிக்காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை, இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் என்றும்,யாரையும் முழுமையாக நம்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
-
சிம்மம்
சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும். சிங்கத்திற்கு பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை. இதன் காரணத்தினால், சிம்மராசிக்காரர்கள் அவசியம் கருதி செயல்படுபவர்கள் எனக்கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக,எதை பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் தனியாக இருக்கவே விரும்புவார்கள் என்றும்,தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்மராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகக்காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது
-.
கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக,இளமையாக,கவர்ச்சியாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக,கவர்ச்சியாக,இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக்கூறப்படுகிறது.கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியின் உருவம் கண்களைக்கட்டிக்கொண்டு ஒரு கையில் தராசு ஏந்தி நிற்கும் பெண் ஆகும். தராசு பெரும்பாலும் வியாபார நிறுவனங்களிலேயே காணப்படும்,இதனால் துலாம் ராசிக்காரர்கள் வியாபார தந்திரம் உடையவர்கள் என்றும்,எதையும் சீர்தூக்கிப்பார்த்து திறம்பட செயல்படக்கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர்கள்.
-
விருச்சிகம்
விருச்சிக ராசியின் உருவம் தேள் ஆகும். தேள்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும்.மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை. இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக நடந்துகொள்ளமாட்டார்கள். இவர்களை புரிந்துகொள்வது சிரமமாகவே இருக்கும். இரண்டு தேள்கள் ஒரே இடத்தில் வசிக்காது. அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்து போகும். இதனால் விருச்சிக ராசிக்காரர்களிடம் போட்டி,பொறாமை போன்ற குணங்கள் காணப்படும். பெண் தேளானது குஞ்சி பொறித்தால் தாய்த்தேள் இறந்துவிடும்,இதனால் விருச்சிக ராசியினர் சிலருக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது
-.
தனுசு
தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும்,பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும். இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும்,பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால் ,இந்தராசிக்காரர்கள் தங்களுடைய மிருக குணங்களிலிருந்து விடுபட்டு மனித தன்மையை வளர்த்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முடிந்தவரை தங்கள் குறைகளை திருத்திக்கொல்வதற்கு தயாராகவே இருப்பார்கள். இந்த ராசி உருவம் வில்லேந்தி குறி பார்ப்பது போல் உள்ளது,இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனேயே நடத்திசெல்வார்கள் எனக்கூறப்படுகிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில் வீரன் சரியாக குறிபார்க்க முடியும்,இதன் காரணத்தால் தனுசுராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும். தர்மர்த்தை நிலை நாட்ட ஸ்ரீராமன் வில்லேந்தினான் என்பர்,இதனால் வில் தர்மத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காக போராடுவார்கள்
-
மகரம்
மகர ராசியின் உருவம் முதலையாகும். முதலை தன் இரைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக்கிடக்கும் குணமுடையவை,இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்கள் காரியங்களை நடத்தி செல்வதில் வல்லவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். முதலைகள் போல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள். தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்,ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வார்கள். வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள்,கிடக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.பொறுமை இவர்களுக்கு அதிகம்
-.
கும்பம்
கும்ப ராசியின் உருவம் பானயை தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும். பானையானது சேகரிப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகும். இதனால்,கும்ப ராசிக்காரர்கள் யாரிடம் பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.அதாவது இவர்கள் எதை செய்தாலும் லாபம் கருதியே செயல்படுவார்கள். பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள்,யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்ப்பார்கள். மனிதன் பானையை தலையில் சுமந்தபடி நிற்பதால்,இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதாவது அடிமை வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.
-
மீனம்
மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும். மீன்கள் எப்பொழுதும் தன்னையும்,தன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கும். இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்று புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருப்பவை, இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்,இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிப்பதை பெரிதும் விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
எனக்குத்தெரிந்தவரை ஒரு சில குணாதிசயங்களை மட்டும் இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.
***********************************************************************************

நீல நிற தினம்!

சிவப்பு என்றால் புரட்சி, வெள்ளை என்றால் சமாதானம் என்று ஒவ்வொரு நிறத்துக்கும் அரசியல் அர்த்தம் சொல்பவர்கள், நீல நிறத்தை ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலோடு பொருத்துகிறார்கள். அரசியல் களத்தில் அதுதான் அர்த்தம். ஆனால், அகத் திணையில் அது காதலின் நிறம். கூடலும் கூடல் நிமித்தமும் குறிக்கும் குறிஞ்சியின் நிறம் நீலம். குறிஞ்சி என்பது முதலில் கூடலைத்தான் சொன்னது. பின்னரே, அது நிலத்துக்கு உரிப்பொருளாயிற்று என்று வாதிட்ட தமிழறிஞர்களும் உண்டு.

மலரே குறிஞ்சி மலரே என்று தலைவியையே மலராக்கியவர்கள் நமது திரைக்கவிஞர்கள். தலைவன் சூட நீ மலர்ந்தாய், பிறவிப்பயனை அடைந்தாய் என்ற அடுத்தடுத்த வரிகள் பெண்ணுரிமைப் போராளிகளைச் சினஞ்கொள்ளச் செய்யலாம். மணம் முடித்த பின்னரே பெண்கள் மலரணிவது பழந்தமிழர் வழக்கம். தலைவன் தலைவியின் கூந்தலில் மலர் சூட்டுதல் மணச்சடங்காயிருந்தது. அதையெல்லாம் சொல்லி அந்தத் திரைப்பாடலின் பல்லவி மலரைப் பார்த்து பாடியதுதான் என்றும் மலர்கள் மங்கையரின் கூந்தலேறிய பிறகே பிறவிப்பயனை அடைகின்றன என்றும் பொருள்விளக்கம் கொடுக்கலாம்தான். ஆனால், இறைவனடி சேர்வதே பிறவியின் பெரும்பயனும் பேரின்பமும் என்ற இடைக்கால பக்திநெறிக்கு மாற்றாக, தனது பாடல்களில் காதலையே பேரின்பமாகப் பாடி பரவசமடைந்த வாலிக்கு அது துரோகமாகிவிடும்.

2006-க்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து, வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நீலக்குறிஞ்சி மலர்களால் பூத்துக்குலுங்கப்போகிறது மேற்குத் தொடர்ச்சி மலை. நீலம் பரவட்டும்!

Wednesday 26 September 2018

உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் !


‘ஹூம்… எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்! கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா. 

இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை!

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது… கர்வம்! ‘நான்’ என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர். கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், ‘கர்வம் கூடாது; தலைக்கனம் வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்; கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார்; பதவியை இழந்தார்; பணியை இழந்தார்; வெறுமனே இருந்தார்.

‘சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க… பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.

நிபந்தனையா? அதென்ன…?

‘இழந்த ஆற்றலையும் தேஜஸையும் வழங்குங்கள் ஸ்வாமி’ என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ‘நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், ‘கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், ‘விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!

திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு… பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!

தலத்தின் நாயகி-  கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!

குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்… சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.

ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே… சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.

இன்னொரு விஷயம்… பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான… அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் ‘பதஞ்சலி பிடவூர்’ என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி

மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர்.

இந்த வேளையில்… நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!

மஞ்சள் காப்பு… புளியோதரை!

வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்!

7ஆம் தேதி பிறந்தவரா?

ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம்! இந்த ஏழு நிலைகளைக் கடந்து, சுமார் 300 அடி தூரத்தில் மூலவரான பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதியில், பங்குனியில், சூரிய பகவான் தனது வெளிச்சக் கதிர்களால் சிவனாரை வழிபடுகிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி, ஏழு நிலை கோபுரத்தைக் கடந்து, ஏழு நிமிடங்கள்… சிவனாரின் மீது சூரிய ஒளி படும். ஆகவே 7-ஆம் தேதி பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பர். அதுமட்டுமா? ஜாதகத்தில் 7-ஆம் இடத்தைப் பொறுத்தே ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் நல்ல நண்பர்கள் அமைவார்கள். எனவே தோஷ நிவர்த்திக்காகவும் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்மாவை வழிபடுகின்றனர்.

ஜென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது விசேஷம்!

மாதந்தோறும் வருகிற… உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில்,  பிரம்மாவை தரிசித்தால், செல்வம் பெருகும்; ஐஸ்வரியம் கொழிக்கும்; இழந்ததைப் பெறுவீர்கள்!

எங்கே இருக்கிறது?

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உண்டு; ஆனாலும் குறைவுதான்!

சமயபுரத்தில் இருந்து சிறுகனூர் வரை பேருந்து வசதி நிறையவே உண்டு. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

கோயில் தொடர்புக்கு:
94438 17385 / 98949 26090

N2R_NandhakumaR
Channel N2R
ENN2AAR Groups

Saturday 22 September 2018

இலிங்காஷ்டகம் | Lingashtagam - ஸ்லோகமும் பொருளும்.


இலிங்காஷ்டகம்  

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் 
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

 ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் 
ராவண தர்ப வினாஷன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

 காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

 ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

ஸர்வ  ஸுகந்த ஸுலேபித லிங்கம் 
புத்தி விவர்த்தன காரண லிங்கம் 
சித்த சுராசுர வந்தித லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

 கனக மஹாமணி பூஷித லிங்கம் 
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் 
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

 தக்க்ஷ  ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

குங்கும சந்தன லேபித லிங்கம் 
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்
  
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் 
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் 
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் 
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் 
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் 
பராத்பரம் பரமாத்மக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே. லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால் சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும் சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.  

N2R_NandhakumaR

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...